பரபரப்பான வாழ்க்கை சூழல் ,மாறுபட்ட உணவு பழக்க வழக்கங்கள், துரித உணவுகள் என வாழ்வின் ஒவ்வொரு நொடியும் எதை நோக்கி ஓடுகிறோம் எதை எதிர்பார்த்து ஓடுகிறோம் என்ற கேள்விகளுக்கு நடுவிலேயே ஒவ்வொரு நாளும் கடந்து செல்லும் அளவிற்கு இயந்திர மயமாகிவிட்ட வாழ்க்கை சூழலில் பல்வேறு விதமான நோய்கள் மனிதனை தாக்குகின்றன. அதிலும் குறிப்பாக முன்பெல்லாம் வயோதிகர்கள் உள்ளிட்டவர்களுக்கு வரும் என எண்ணிய இருதய நோய் தற்பொழுது வயது வரம்பு இன்றி பல்வேறு தரப்பினரையும் ஆட்கொண்டுள்ளது..
இதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும் நம்முடைய வாழ்வியலில் ஏற்பட்டிருக்க கூடிய பல்வேறு மாற்றங்களும் நம்மை சுற்றி நடக்கும் செயல்களும், மன அழுத்தமே பிரதான காரணியாக பார்க்கப்படுகிறது. மேலும் இன்றைய காலகட்டத்தில் உணவு முறை முற்றிலும் மாறுபட்டு இருப்பதும் இதன் ஒரு பிரதான காரணியாகும்.
இவ்வாறான சூழலில் நெஞ்சு வலி ஏற்படும் பொழுது ஒருவர் மருத்துவமனையை நாடி அவருக்கு இருதய பாதிப்புதான் என கண்டறிவதற்குள் நோயின் தீவிரம் அதிகரித்து அதன் பின்னர் அளிக்கப்படும் சிகிச்சை பலனின்றி போகும் வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் நெஞ்சுவலி ஏற்படுபவர்களுக்கு உடனடியாக இருதய நோய் நிபுணர்கள் மூலமாக பிரத்தியேக சிகிச்சை அளிக்கும் வகையில் "நெஞ்சுவலி சிகிச்சை மையம்" துவங்கப்பட்டு அதன் மூலமாக மார்பு வலி என வருவோருக்கு உடனடியாக 24 மணிநேரமும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக பிரத்தேக சிகிச்சை அளிக்கும் வகையில் இருதய நோய் நிபுணர்கள் பணியில் இருப்பர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரதான நோக்கம் "கோல்டன் ஹவர்ஸ்" என்று செல்லக்கூடிய நெஞ்சுவலி ஏற்பட்டு ஒரு மணி நேரம் மிக முக்கியம் என கூறும் மருத்துவர்கள் இந்த "கோல்டன் ஹவர்ஸ்" க்குள் சிகிச்சை பெற்றால் அது மிகுந்த பலன் அளிக்கும் எனவும் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பேசிய அரசு இராஜிவ் காந்தி மருத்துவமனை மருத்துவர் தேரனிராஜன்,நெஞ்சு வலி ஏற்பட்டவர்களுக்கு முதலில் இ.சி.ஜி என்பது அவசியமான ஒன்று அதனை செய்வதன் மூலம் நோயின் தன்மை குறித்து அறிந்து கொள்ள முடியும்.நெஞ்சுவலி மையத்தில் இசிஜி எக்கோ உள்ளிட்ட பல்வேறு கருவிகள் உள்ளன இதன் மூலம் உடனடியாக இது இருதயம் சம்பந்தப்பட்ட நோயா அல்லது வேறு பிரச்சனையா என்பதை கண்டறிந்து, இருதய நோயாக இருப்பின் உடனடியாக சிகிச்சை அளிக்கும் வண்ணம் 24 மணி நேரமும் மருத்துவர்கள் தயார் நிலையில் நோயாளிகளை அழைத்துச்செல்வதற்காக பிரத்தியேகமாக அங்கு பேட்டரி கார் உள்ளிட்ட வசதிகளும் இருக்கின்றன.
தற்பொழுது வரை நான்காயிரம் திற்கும் மேற்பட்டோர் இங்கு நெஞ்சுவலி என வந்து பரிசோதனை செய்து கொண்டுள்ளனர்.அதில் 1029 பேருக்கு இருதய நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் 36பேருக்கு ஆஞ்சியோ சிகிச்சையும், 759 பேர் ஐ.சி.யு வார்டிலும் உடனடியாக அனுமதிக்கப்பட்டு அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.நெஞ்சு வலி சிகிச்சை மையம் என்பது அரசு மருத்துவமனைகளில் அரிதான ஒன்று. குறிப்பாக கடந்த 9 மாதத்தில் இந்த நான்காயிரம் பேர் என்ற எண்ணிக்கையை இம்மையம் கடந்துள்ளது என்றார்.
மேலும், உதவி பேராசிரியர் இருதயவியல் பிரிவு மருத்துவர் பிரதாப் குமார் கூறுகையில், பொதுவாக தாடையின் கீழ் பகுதியில் இருந்து வயிற்றில் தொப்புள் பகுதிக்கு மேல் வரை வலி ஏற்பட்டால் அது நெஞ்சு வலியின் அறிகுறியாக இருக்கலாம். மேலும் இடது தோள்பட்டையில் இருந்து இடது கை முழுவதும் வலி பரவினாலும் அதுவும் நெஞ்சுவலியினுடைய அறிகுறியாக இருக்கலாம், சிலருக்கு வாந்தி மயக்கம் உள்ளிட்டவை வரலாம் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வழி தெரியாமல் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம் இவையும் நெஞ்சுவலியின் உடைய அறிகுறிகள் ஆகும்..
இது சாதாரண வாய்வு பிரச்சனை உள்ளிட்டவை என எண்ணாமல் உடனடியாக மருத்துவமனையை நாடி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் இருதய நோயை பொறுத்தவரை "கோல்டன் ஹவர்ஸ்" என்பது மிக முக்கியமான ஒன்று.60 நிமிடம் அதாவது நெஞ்சு வலி ஏற்பட்டு ஒரு மணி நேரத்திற்குள் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொழுது அச்சகிச்சை அவர்களை அந்நோயிலிருந்து இருந்து மீண்டு வரவும் இயல்பாகவும் வைக்க உதவுகிறது..
பொதுவாக நெஞ்சு வலி ஏற்பட்டால் அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்று அங்கு பரிசோதித்த பின்னர் அவர்கள் மூலமாக இருதய நோய் நிபுணர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டு பின்னர் அவர்கள் சிகிச்சை பெறுவர் இதற்கு ஏற்படும் காலதாமதம் ஆபத்தினை விளைவிக்க கூடும். இதனால் நமது அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் நெஞ்சுவலி சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டு இதன் மூலம் இங்கு வருபவர்கள் நேரடியாக இசிஜி செய்து கொண்டு அதன் முடிவுகளின் படி அவருக்கு இருதய நோய் இருப்பின் உடனடியாக
இருதய உள்ளூடுருவி ஆய்வகம் மூலமாக அவர்களுக்கு ஏற்பட்டுள்ள ரத்த அடைப்பு சரி செய்யப்பட்டு ரத்த ஓட்டம் ஆனது சீரமைக்கப்படுகிறது. மேலும் இருதய நோய் பரிசோதனையில் ஆரம்பித்து அதனை கண்டறியும் பட்சத்தில் அதற்கான சிகிச்சைகளையும் சேர்த்து பல லட்சங்கள் தனியார் மருத்துவமனைகளில் செலவாகும் ஆனால் அரசு மருத்துவமனையில்இச்சிகிச்சை இலவசமாகவே கிடைக்கின்றது என்றார்..
மருத்துவம் என்பது சேவைத்துறை , சேவை ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் அரசு மருத்துவமனைகளுக்கும் அரசு மருத்துவர்களுக்கும் என்றும் துணை நின்று வழி நடத்தும் தமிழ்நாடு அரசின் மக்கள் நலப்பணி எனும் மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரமாய் இம்மையம் மின்னும் என்பதில் ஐயமில்லை.