3500 அரசு பள்ளி மாணவர்கள் தயாரித்த 150 சிறிய ரக செயற்கைக்கோள்களுடன் இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் செங்கல்பட்டு அருகே பட்டிப்புலம் கிராமத்தில் இருந்து வெற்றி கரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்த வகையான ராக்கெட் குறைந்த உரத்தில் பறக்கக்கூடியதாகவும், செயற்கைகோள்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காகவும், தரவுகளை சேகரிப்பதற்காகவும் அனுப்பப்படுகிறது. இந்த ராக்கெட் 'லைட் சவுண்ட் ராக்கெட்' என அழைக்கப்படுகிறது.
ஹைபிரிட் ராக்கெட் 2 புள்ளி 4 கிலோமீட்டர் உயரம் வரை மட்டுமே செல்லக்கூடியதாகும். இந்தியாவில் 20 மாநிலங்களை சேர்ந்த 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் 3 ஆயிரத்து 500 அரசு பள்ளி மாணவர்கள் இணைந்து தயாரித்த 150 சிறிய செயற்கைகோள்களும் ஹைபிரிட் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
விண்ணில் ஏவப்பட்டுள்ள சிறிய ரக செயற்கைகோள்கள் மூலம் வானிலை, கதிர்வீச்சு தன்மை, வளிமண்டல நிலை உள்ளிட்ட பல்வேறு தரவுகளை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை, கல்பாகம் அணு ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து மார்ட்டின் அறக்கட்டளை மற்றும் ஸ்பேஸ் சோன் ஆஃப் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றுடன் இணைந்து ராக்கெட் ஏவுதல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஹைபிரிட் ராக்கெட் ஏவும் நிகழ்ச்சியில், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை மற்றும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். அரசுப் பள்ளி மாணவர்கள் விண்வெளி அறிவியலில் பயிற்சி பெறுவதற்கும், அந்தத் துறையில் வாழ்க்கையை ஆராய்வதற்கான தளத்தை அவர்களுக்கு வழங்குவதற்கும் இது ஒரு நல்ல தளமாக இருக்கும்.