தெலுங்கானா மாநிலம் கம்மம் பகுதியைச் சேர்ந்தவர் துளசி சுகுணா பிரசாத். இவருடைய மனைவி கல்யாணி. இந்த தம்பதியின் மகன் அமெரிக்காவில் வசிக்கிறார். இதனால் மகனை அமெரிக்காவில் சென்று பார்ப்பதற்காகத் தம்பதியினர் விசாவுக்கு விண்ணப்பித்தனர். அதன் நேர்காணலுக்காக, கணவன், மனைவி இருவரும், கடந்த 21 ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தில் இருந்து, விமானத்தில் சென்னை வந்தனர்.
சென்னையில் விசாவுக்கான பணிகளை முடித்துவிட்டு, இன்று விமானத்தில் ஹைதராபாத் செல்வதற்காகச் சென்னை உள்நாட்டு விமானநிலையம் வந்தனர். அப்போது துளசி சுகுணா பிரசாத் திடீரென மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த மனைவி அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் துளசி சுகுணா பிரசாத்தை, சென்னை விமான நிலையத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துளசி சுகுணா பிரசாத், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் பிரேதப் பரிசோதனை முடிந்து, உடலைத் தெலுங்கானா மாநிலம் எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.