’கழகங்கள் இல்லா தமிழகம்’ என்று ஆரம்பித்த பா.ஜ.க பின்னர் இது எல்லாம் தமிழ்நாட்டில் வேலைக்கு ஆகாது என்று அதில் ஒரு கழகத்தோடே கூட்டணி வைத்தது. அதன்பின்னர் அக்கா தமிழிசை வந்து 'தாமரை மலர்ந்தே தீரும்' என்று எப்போது மலரும் என்றே சொல்லாமல் சொல்லி விட்டு சென்றார்.
இது வேலைக்கு ஆகாது என்று பா.ஜ.க தலைமைக்கு தெரிந்ததோ என்னவோ, நன்றாக பேசிக்கொண்டிருந்த அக்காவை ஆளுநராக்கி அடுத்து எல்.முருகனை கொண்டு வந்தனர். அவரும் என்னன்னவோ செய்து பார்த்த பின்னர் வேல் யாத்திரையை தொடங்கினார்.
பின் அவரை டெல்லிக்கு அனுப்பிய பா.ஜ.க. கர்நாடக சிங்கம் என்று யாராலோ சொல்லப்பட்ட அண்ணாமலையை ஆடு வளர்க்கும் இளைஞராக தமிழ்நாட்டுக்கு அனுப்பியது. பா.ஜ.க.வில் இணைந்ததும், பால்வடியும் முகமாக செய்தியாளர்களை சந்தித்தவர், சில நாட்களிலேயே பா.ஜ.க தலைவராக அறிமுகமானார்.
எப்படி மோடி வந்த பின்னர் பா.ஜ.க மாறியதோ அப்படியே தமிழ்நாட்டில் மாறும் என்று பா.ஜ.க தொண்டர்கள் எண்ணிய நேரத்தில் அண்ணாமலையின் பேச்சால் அவர்களே அந்த எண்ணத்தை மாற்றி கொண்டனர். வரலாற்று உளறல் தொடங்கி உயிரோடு இருந்தவரை இறந்தார் என்று சொன்னது வரை அனைத்திலும் உளறிக்கொட்டி சொதப்பி வருகிறார் அண்ணாமலை.
அந்த வரிசையில், இப்போது ’கல்லூரி மாணவிகளை வளைக்கிறோம்’ என்ற பெயரில் ஒரு ராஜதந்திரத்தை அரங்கேற்றி அவமானப்பட்டு நிற்கிறது பா.ஜ.க. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பா.ஜ.க தாமரை மாநாடு நடைபெற உள்ள நிலையில் திருப்பூரில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி, எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கல்லூரியில் உறுப்பினர் சேர்க்கை நடத்த பா.ஜ.க திட்டமிட்டுள்ளது.
உடனே சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் அண்ணாமலையுடன் selfie எடுக்கும் விழா ஒன்றை நடத்தியுள்ளது. என்னவோ கல்லூரி மாணவர்களே இந்த விழாவை எடுப்பதுபோல விளம்பரம் செய்து பா.ஜ.க வெளியிட்டது. பெரும் சாதனை செய்ததாக பா.ஜ.க எண்ணிக்கொண்டிருந்த நிலையில், அந்த விளம்பரம் எதிர்க்கட்சியை தாக்குவதற்கு பதில் பா.ஜ.க-வையே தாக்கியுள்ளது.
இந்த விளம்பரம் வெளியானதும் இது குறித்து கல்லூரி முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனே அனுமதி இல்லாமல் எப்படி எங்கள் கல்லூரி பெயரில் இந்த விழாவை நடத்தலாம் என்று கோவப்பட்டு, கல்லூரி வளாகத்தில் நிகழ்ச்சி நடத்த எந்த அனுமதியும் தரவில்லை எனவும் விளக்கம் அளித்து நோட்டீஸ் வெளியிட்டார்.
என்ன நடந்தாலும் சரி நாங்கள் இந்த விழாவை நடத்தியே தீருவோம் என்று பா.ஜ.க மகளிர் அணியினர் அடம்பிடித்த நிலையில் அங்கு எந்த மாணவரும் வராதது சோகத்தின் உச்சம். சரி மாணவர்கள்தான் வரவில்லை என்று மகளிர் அணியினர் இருந்த நிலையில், கல்லூரிக்குள் நுழைய அவர்கள் முயற்சித்துள்ளனர்.
உடனே அங்கு வந்த கல்லூரி பேராசிரியர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்த நிலையில், அங்குள்ள பொதுமக்களும் மகளிர் அணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வேறு வழியின்றி வழக்கம்போல, பா.ஜ.க நிர்வாகிகள் சோகத்தோடு திரும்பினர்.