நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் நீர்முளை கடைத்தெருவை சேர்ந்தவர் 70வயதான பாத்திமா பீவி மற்றும் அவரது பேத்தி நூரா பாத்திமா(12) நேற்றிரவு நீர்முளை கடைத்தெருவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார்.
பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு சாலையோரமாக நடந்து சென்றுள்ளனர். அப்போது வேளாங்கண்ணியில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி வந்த கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நீர்முளை கடைத் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது.
பின்னர் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த பாத்திமா பீவி, நூரா பாத்திமா ஆகியோர் மீதும் மோதியது. இதில் படுகாயம் அடைந்த பாட்டி - பேத்தி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தலைஞாயிறு போலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாத்திமா பீவி, நூரா பாத்திமா ஆகியோரின் உடல்களை மீட்டு நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவ இடத்தினை நாகை மாவட்ட எஸ்.பி ஜவஹர் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். விபத்தில் உயிரிழந்த நூரா பாத்திமா அந்த பகுதியில் ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இதுதுகுறித்து தலைஞாயிறு போலிஸார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் வாய்மேடு அருகே உள்ள ராஜன்கட்டளை பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இந்த விபத்தை அரங்கேற்றி உள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தலைஞாயிறு அருகே சாலையோரம் நடந்து சென்ற பாட்டி-பேத்தி கார் மோதி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.