நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் அமலாக்கத்துறையில் ஆஜராக வேண்டும் என அண்மையில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த மூன்று நாட்களாக ஆஜரான ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் ஒன்றிய பா.ஜ.க அரசின் இந்த பழிவாங்கல் நடவடிக்கையை எதிர்த்து இந்தியா முழுவதும் மூன்று நாட்களாக காங்கிரஸ் தொண்டர்கள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மக்களை உறுப்பினர் ஜோதிமணியை போலிஸார் வலுக்கட்டாயமாகக் கைது செய்துள்ளனர். அப்போது மக்களை உறுப்பினர் என்றும் பாராமல் அவரது உடையை போலிஸார் கிழித்துள்ளனர்.
இது தொடர்பான, கைது செய்யப்பட்டு வாகனத்தில் செல்லும்போது வீடியோ ஒன்றைத் தனது ட்விட்டரில் ஜோதிமணி வெளியிட்டுள்ளார். அதில்,"சட்டத்திற்கு விரோதமாக எனது உடைகளைக் கிழித்து, ராணுவத்தின் உதவியோடு என்னை டெல்லி போலிஸார் கைது செய்து ஒரு மணி நேரமாக எங்கோ அழைத்துச் சென்றுகொண்டிருக்கின்றனர்.
ஒரு மணி நேரமாகத் தண்ணீர் கேட்டும் தொடர்ந்து தர மறுக்கின்றனர். இது குறித்து நாடாளுமன்ற சபாநாயகரிடம் புகாரளித்துள்ளேன். ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கே நரேந்திர மோடியின் ஆட்சியில் இது தான் நிலை என்றால் சாதாரண பெண்களுக்கு, எதிர்க்கட்சியை சேந்தவர்ககளுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, இரண்டு நாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்திய முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரத்தை போலிஸார் தாக்கியதில் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தற்போது மக்களவை உறுப்பினர் ஜோதிமணியின் ஆடைகளை டெல்லி போலிஸார் கிழித்துள்ளனர். போலிஸாரின் அந்த அராஜக நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.