சமீபத்தில் ஐக்கிர அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடுத்ததாக அமெரிக்கா, தென்கொரியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 24ஆம் தேதி அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஐக்கிர அரபு அமீரகத்திற்குச் சென்றார். துபாய், அபுதாபி நாடுகளுக்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தப் பயணத்தின்போது முதலீட்டாளர்களைச் சந்தித்தார்.
முக்கிய தொழில் நிறுவனங்களுடன் ரூ.6,100 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் மூலம் சுமார் 14,700 பேருக்கு வேலைவாய்ப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அடுத்தகட்ட வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு, “அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளும் முதல்வருக்கு அழைப்பு விடுத்துள்ளன. அடுத்தக்கட்ட சுற்றுப்பயணம் பற்றி விரைவில் அறிவிக்கப்படும்.
கடந்த 2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை அந்நிய நேரடி முதலீடு 41 சதவீதம் அதிகரித்திருப்பதாக ஒன்றிய அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.