தமிழ்நாடு

“10 மாதங்களில் 208 தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம்” : 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

இந்த அரசின் முதல் ஆண்டிலேயே 505 வாக்குறுதிகளில், 208 வாக்குறுதிகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“10 மாதங்களில் 208 தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம்” : 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

*தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும், அரசு நிறைவேற்றி வரும் திட்டங்கள் குறித்தும் விதி 110-ன்கீழ் அளித்த அறிக்கை பின்வருமாறு :-

பேரவைத் தலைவர் அவர்களே,

தமிழ்நாடு சட்டமன்றத்திலும், பொது வெளியிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும், அவற்றை இந்த அரசு நிறைவேற்றி வருவது குறித்தும் சில கருத்துகளும், விமர்சனங்களும் எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்டு வருவதால், அவை குறித்து மாமன்ற உறுப்பினர்களுக்கும், பொது மக்களுக்கும் இப்பொருள் குறித்த உண்மை நிலையை விளக்கும் வகையில், உங்கள் அனுமதியுடன் இந்த அவையில் ஒரு வெள்ளை அறிக்கைக்குச் சமமான, ஒரு அறிக்கையை சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் இப்பொழுது நான் வெளியிட விரும்புகிறேன்.

பேரவைத் தலைவர் அவர்களே,

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், அறிவுச்சுடர் பேரறிஞர் அண்ணா, நல்லாட்சி தந்த நாயகராகவும், நற்றமிழ் வளர்த்த புரவலராகவும், சொல்லாலும், செயலாலும், எழுத்தாலும் தமிழ் வளர்த்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழியில் முனைப்போடு செயல்பட்டு வரக்கூடிய இந்த அரசு, ஆட்சிக்கு வந்து பத்து மாதங்கள் நிறைவு பெற்றுள்ளது.

தி.மு.க. தேர்தல் அறிக்கை தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை குறிப்பிட்ட காலவரையறைக்குள் நிறைவேற்றுவதற்கும், மாநிலப் பொருளாதாரத்தை மீட்பதற்கும், துறைவாரியான முன்னேற்றத்திற்கும், ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையாகும். இந்த அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள 505 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். அதில் சொல்லப்படாத நலத் திட்டங்களும் செயல்படுத்தப்படும் என்ற நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புடன் மக்கள் அளித்த மாபெரும் வெற்றியைப் பெற்று அமைந்துள்ள இந்த அரசு, அதனை நிறைவேற்ற உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.

தமிழக மக்களின் நம்பிக்கையை உறுதி செய்யும் விதமாக, கடந்த மே 7 ஆம் தேதியன்று பதவியேற்ற ஒரு சில மணித் துளிகளிலேயே தமிழகத்திலுள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு அரசாணைகளை நான் வெளியிட்டேன்.

* 2.09 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.4,000 கொரோனா நிவாரண நிதி.

* ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு.

* மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம்.

* மக்களின் மனுக்களின் மீது தீர்வு காண “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” துறை.

* தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான அனைத்து செலவினங்களையும் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் அரசே ஏற்பு.

இந்த ஐந்தில், முதல் நான்குமே திராவிட முன்னேற்ற கழக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தவை. கடந்த பத்து மாதங்களுக்குள் நிறைவேற்றப்பட்ட முக்கியமான சில வாக்குறுதிகளை நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.

வேளாண்மை உற்பத்தியைப் பெருக்கவும், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும், முதன்முறையாக வேளாண்மைக்கென்று தனியாக இரண்டு நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

* கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் சுமார் 55 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை

* 2,756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது.

* கூட்டுறவு அமைப்புகள் மூலம் வழங்கப்பட்ட 5 சவரனுக்குட்பட்ட ரூபாய் 5 ஆயிரத்து 250 கோடி நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

* பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு.

* ஊரக பகுதிகளில் 1,200 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தைத் செயல்படுத்துவது.

* ‘நமக்கு நாமே’ திட்டம். உள்ளூர் சமூகங்களுடன் இணைந்து 100 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படுவது.

"இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டம்" என்ற உன்னதத் திட்டத்தை செயல்படுத்துவது.

* அண்ணா நூற்றாண்டு நூலகம் புதுப்பொலிவு பெறுக்கூடிய வகையில் புனரமைத்தல் மற்றும் மதுரையில் கலைஞர் நூலகம் அமைத்தல்.

* பத்திரிகையாளர்கள், இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம், மீத்தேன்/நியூட்ரினோ மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் எட்டுவழிச்சாலைத் திட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள், பொதுமக்கள் மீது போடப்பட்ட 5,570 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

* மூன்று வேளாண் சட்டங்கள் மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, மேற்படி மூன்று வேளாண் சட்டங்களும் ஒன்றிய அரசால் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

* NEET தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான சட்ட முன்வடிவைப் சட்டப் பேரவையில் நிறைவேற்றியது.

* கொரோனா சிகிச்சை பணியில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 இலட்சம் ரூபாய் கொரோனா இழப்பீட்டுத் தொகை.

* அதேபோல், கொரோனா நோய்த் தொற்றால் காவல் துறையில் உயிரிழந்த காவல்துறை அலுவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வீதம் நிவாரணத் தொகை.

* குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கக்கூடிய தகுதி வாய்ந்த அனைத்து நபர்களுக்கும் பதினைந்து நாட்களுக்குள் ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்குதல்.

* தமிழக அரசிற்கு ஆலோசனைகளை வழங்கிட ‘முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு’ அமைக்கப்பட்டுள்ளது.

* பணியிலிருக்கும்போது உயிரிழக்கும் அரசுப் பணியாளரின் குடும்பத்தினருக்கு, குடும்பப் பாதுகாப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் உதவித் தொகை 3 இலட்சம் ரூபாயிலிருந்து 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது.

* தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் தமிழ் மொழி தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

* ஸ்டெர்லைட் சம்பவம் குறித்து தவறாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண தொகை மற்றும் கல்வி தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது.

* மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு

* 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டது.

* இந்த அரசினால் வெளியிடப்பட்டுள்ள பல்வேறு அறிவிப்புகளில், தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளோடு, இடம் பெறாத அறிவிப்புகளும் அடங்கும். அவை குறித்து நடவடிக்கைகள் தொடர்புடைய துறைகளால் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில்,

* இந்த மாமன்றத்தில் ஆளுநர் அவர்கள் ஆற்றிய உரையில் 52 தேர்தல் வாக்குறுதிகளும்;

* ஆளுநர் அவர்களின் உரை குறித்த என்னுடைய பதிலுரையில் 1 வாக்குறுதியும்;

* நிதியமைச்சர் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட 2021–22 ஆம் ஆண்டு மற்றும் 2022-23 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கையில் 33 வாக்குறுதிகளும்;

* வேளாண்மைத் துறை அமைச்சர் அவர்களால் வேளாண்மைக்காக தாக்கல் செய்யப்பட்ட 2021-22 ஆம் ஆண்டு மற்றும் 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் 21 வாக்குறுதிகளும்; விதி 110-ன்கீழ் வெளியிடப்பட்ட அறிக்கையில் 3 வாக்குறுதிகளும்; அவரவர் துறை சார்பாக அமைச்சர் பெருமக்கள் வெளியிட்ட அறிவிப்புகளில் 78 வாக்குறுதிகளும்; இதர அறிவிப்புகளில் 10 வாக்குறுதிகளும், நேரடியாக நிறைவேற்றப்பட்ட 10 வாக்குறுதிகளும் என இதுவரை மொத்தம் 208 தேர்தல் வாக்குறுதிகள் அரசின் அறிவிப்புகளாக இடம்பெற்றுள்ளன. இவை அனைத்திற்கும் உரிய அரசாணைகள் வெளியிடப்பட்டு, அரசாணைகள் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் அனைத்தும் முறையாகவும், முழுமையாகவும் செயல்படுத்தப்படுவதை இந்த அரசு முனைப்புடன் கண்காணித்து வருகிறது.

இந்த அரசு பதவியேற்று, இதுவரை நடைபெற்ற சட்டசபை கூட்டங்கள், அரசு விழாக்கள் போன்றவற்றில் குறிப்பிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம் பெற்று நடவடிக்கை எடுக்கப்பட்ட வாக்குறுதிகளைத் தவிர, தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல்வேறு கொள்கை அளவிலான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில், தமிழக மக்களின் சமூகப் பொருளாதார முன்னேற்றம் மற்றும் பலவகையான நலத்திட்ட உதவிகள் என சொல்லாதவற்றையும் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. உதாரணமாக,

பள்ளிக்கு வந்து கல்வி கற்று வந்த மாணவர்களை வீட்டுக்குள் முடக்கி வைத்த கொரோனா பெருந்தொற்று குழந்தைகளின் கல்வியை மட்டுமின்றி அவர்களின் மனதையும் பாதித்துவிட்டது. இந்தப் பாதிப்பை சரி செய்யக்கூடிய விதமாக தனித்துவம் கொண்ட ‘இல்லம் தேடிக் கல்வித் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டு வகுப்பறையைப் பள்ளிகளுக்கு வெளியேயும் நீட்டிக்கச் செய்யும் மகத்தான முயற்சியை இந்த அரசு மேற்கொண்டது.

மாநிலத்தில் தொற்றா நோய்களின் சுமையை எதிர்கொள்ளும் விதமாக இல்லங்களுக்கே சென்று, அனைவருக்கும் நல வாழ்வு என்கிற உயரிய நோக்கத்தினைச் செயல்படுத்தும் வகையில், “மக்களைத் தேடி மருத்துவம்” என்ற புதிய திட்டத்தை செயல்படுத்துவது.

தமிழ்நாட்டில் சாலைப் பாதுகாப்பையும், சாலை விபத்தில் ஒருவர் கூட உயிரிழக்கக் கூடாது என்பதையும் உறுதி செய்யக்கூடிய உயரிய நோக்கத்தோடு “இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும்-48” என்ற உயிர் காக்கும் திட்டத்தை செயல்படுத்துவது;

தமிழ்நாட்டில் உள்ள சிற்றூர்கள் அனைத்தும் அவற்றின் முழு ஆற்றலுக்கேற்ப வளர்ச்சியடைந்து செழிக்க வேண்டும் என்கின்ற நோக்கில் ‘கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை’ அறிமுகப்படுத்தியது;

மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தனித்துவத் திறன்களை மேம்படுத்தி அவர்களுக்கு ஒரு சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்தித் தரக்கூடிய எனது கனவு திட்டமான

‘நான் முதல்வன்’ என்ற உன்னதமான திட்டத்தை செயல்படுத்துவது;

அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு அனைத்து தொழிற் கல்வி இடஒதுக்கீட்டுப் பிரிவுகளில், ஏழரை விழுக்காடு இடங்கள் முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்தல்.

* திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணச் சலுகை.

* கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 இலட்சம் ரூபாய் வைப்பு நிதி, கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்கள் அரசே ஏற்பு.

* * கொரோனாவால் தந்தை அல்லது தாயை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு 3 இலட்சம் ரூபாய் நிவாரணத் தொகை.

தமிழ்நாட்டில் உள்ள முகாம் வாழ் இலங்கைத் தமிழர் நலனைப் பேணிட, வீடு மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு, 317 கோடியே 40 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* ‘தமிழ்நாடு ஆதி திராவிடர்-பழங்குடியினர் நல ஆணையம்’ என்கிற புதிய அமைப்பு ஒன்றைத் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் வகையில் உருவாக்கச் சட்டம் இயற்றப்பட்டு, ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

* பத்திரிகையாளர் மற்றும் ஊடகத் துறையினர் “முன்களப் பணியாளர்” களாக அறிவிப்பு.

* அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினருக்கான சிறப்பு ஊக்கத்தொகை 5,000 ரூபாய் ஆக உயர்வு.

* கொரோனா தொற்றால் மரணமடைந்த அங்கீகரிக்கப்பட்ட ஊடகத் துறையினர்களுக்கான இழப்பீட்டுத் தொகை 10 இலட்சம் ரூபாயாக உயர்வு.

* சட்டமன்றத் தேர்தலின்போது மக்களுக்கு அளித்த 505 வாக்குறுதிகளில், 208 வாக்குறுதிகளை நிறைவேற்ற பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பேரவைத் தலைவர் அவர்களே,

* 2011-2012 முதல் 2020-2021 வரை கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110ன் கீழ் கடந்த ஆட்சியாளர்களால், வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் 537 அறிவிப்புகள் நிலுவையில் உள்ளன.

* செயல்படுத்தப்படாமல் நிலுவையில் உள்ள 537 அறிவிப்புகளில் 5,470 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டிலான 26 அறிவிப்புகள், அவற்றை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் எவற்றையும் ஆராயாமல், ஆய்வு மேற்கொள்ளாமல், 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்த இயலாதவை என கைவிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான, அதாவது 19 அறிவிப்புகள் 2011ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை உள்ள ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டவை ஆகும்.

* மேற்கூறிய 537 அறிவிப்புகளில், 9,741 கோடி ரூபாய் திட்ட மதிப்பிலான 20 அறிவிப்புகளுக்கு, கடந்த ஆட்சிக்காலத்தில் அதற்குரிய அரசாணைகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.

* 537 அறிவிப்புகளில் 491 அறிவிப்புகளுக்கு மட்டுமே அரசாணை மற்றும் அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில், 76,619 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 143 அறிவிப்புகளுக்கு அதற்குரிய அரசாணை மற்றும் அனுமதி வழங்கப்பட்டு, நிதி எதுவும் விடுவிக்கப்படாமலும், பணிகள் துவங்கப்படாமலும் உள்ளன. அவற்றில் சிலவற்றை இந்த மாமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

* 2,160 கோடி ரூபாய்ச் செலவில் 311 ஏக்கரில் சென்னை திருமழிசையில் துணைகோள் நகரம்.

* மதுரை விமான நிலையத்துக்கு அருகில் 586.86 ஏக்கரில் ஒருங்கிணைந்த துணைகோள் நகரம்.

* ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இலவச செல்போன் வழங்கப்படும், பொது இடங்களில் இலவச வை-பை, ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கோ-ஆப்டெக்சில் பொங்கல் பண்டிகைக்கு துணி எடுக்க ரூ.500 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும்,

* அம்பேத்கர் அறக்கட்டளை நிறுவப்படும், அம்மா வங்கி அட்டை அனைவருக்கும் வழங்கப்படும் என்று 2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அ.தி.மு.க. கொடுத்த பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

* ரூ.25-க்கு ஒரு லிட்டர் பால்

* மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் பேணும் வகையில் வைட்டமின் டி மற்றும் இரும்புச் சத்துகள் செறிவூட்டப்பட்ட ஆவின் பால் 1 லிட்டர் ரூ.25-க்கு என குறைந்த விலையில் வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

* இதேபோல மீனம்பாக்கம்-செங்கல்பட்டு இடையே உயர்நிலை நெடுஞ்சாலை மேம்பாலம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

* உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2 வருடத்துக்கு ஒரு முறை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு முறை மட்டுமே உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்திருக்கிறது.

பேரவைத் தலைவர் அவர்களே,

கடந்த ஆட்சியாளர்களால் 2011 ஆம் ஆண்டு அவர்களது தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் நிறைவேறாமல் இருப்பவைகளை தங்களின் கவனத்திற்கு நான் கொண்டு வர விரும்புகிறேன்.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோரச் சாலைத் திட்டம்.

* தென் தமிழகத்தில் ‘ஏரோ பார்க்'

* ஆன்லைன் டிரேடிங் தடுக்கப்படும்.

* மொபைல் மின்னணு ஆளுமைத் திட்டம்.

* தடையில்லா மின்சாரத்துக்கு சிறப்புத் திட்டம்.

* இலவச டிடிஹெச் சேவைகள் விரைவாக வழங்கப்படும்.

* வீடுகளில் திருட்டு, கொள்ளைகளைத் தடுக்க இளைஞர் சிறப்புப் படைகள்.

* பள்ளிக் குழந்தைகளைப் பாதுகாக்க மாணவர் சிறப்புப் படை.

* மீனவர் பாதுகாப்புப் படை.

* சிங்கப்பூரில் உள்ளதுபோல சென்னை, மதுரை, திருச்சி, கோவையில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

பேரவைத் தலைவர் அவர்களே,

இதை ஒப்பிடும்போது, 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த அ.இ.அ.தி.மு.க. அரசு தனது 2011-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் 186 வாக்குறுதிகளும், 2016 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் 321 வாக்குறுதிகளும் என மொத்தம் 507 வாக்குறுதிகளை அளித்தது. அ.தி.மு.க. ஆட்சி 10 ஆண்டுக் காலம் ஆட்சியில் இருந்தும், இந்த 507 வாக்குறுதிகளில், 269 வாக்குறுதிகளுக்கு மட்டுமே அரசாணை வெளியிட்டு நிறைவேற்றியிருக்கிறார்கள்.

நான் ஏற்கெனவே குறிப்பிட்டதைப்போல, இந்த அரசின் முதல் ஆண்டிலேயே 505 வாக்குறுதிகளில், 208 வாக்குறுதிகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, அவற்றில் 171 வாக்குறுதிகளுக்கு அரசாணைகளும் வழங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பதை உறுப்பினர்களுக்கு நான் சுட்டிக்காட்ட விழைகிறேன்.

கடந்த ஆட்சியாளர்களால் சட்டப்பேரவை விதி எண்.110ன் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் அனைத்தும் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு அறிவிக்கப்பட்டதால், கிட்டத்தட்ட அனைத்து நிதி ஒதுக்கீடு தேவைப்படும் அறிவிப்புகளுக்கும், தொடர்புடைய துறைகளின் மானியக் கோரிக்கைகளில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பதை இந்த மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அந்த அறிவிப்புகள் அனைத்துமே இன்னமும் வெற்று அறிவிப்புகளாக காகிதத்திலேயே உள்ளன. மேலும், அவை விளம்பர நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டவை என்பது தான் நிதர்சனம்.

பேரவைத் தலைவர் அவர்களே!

நான் தொடர்ந்து ஒன்றை வலியுறுத்திச் சொல்லி வருகிறேன். இந்த அவையிலும் பல முறை நான் பதிவு செய்திருக்கிறேன். இது எனது அரசு அல்ல. நமது அரசு. அந்தக் கருத்தினைப் பின்பற்றி இந்த அவையில் நமது அரசின் நிலைப்பாட்டை விளக்கிட நான் விரும்புகிறேன்.

தேர்தல் வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வரும் வேளையில் “பத்து மாதக் குழந்தையிடம் பத்தாம் வகுப்பு மதிப்பெண் என்ன” என்று கேட்பது போல் இருக்கிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, “இந்தக் குழந்தை பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெறுவது மட்டுமல்ல பட்டப் படிப்பிலும் பதக்கம் வெல்லும்”.

நீங்கள் சுட்டிக்காட்டும் ஒவ்வொரு முறையும் எங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்து நீங்கள் வைக்கக்கூடிய நினைவூட்டல் என்றே நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்.

மேலும், ஒன்றை இந்த அவையில் மீண்டும் பதிவு செய்ய விரும்புகிறேன். நமது அரசு சொன்னதை மட்டுமல்ல, சொன்னதற்கு மேலும் செய்து காட்டும் அரசு என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.

இறுதியாக ஒரு கருத்தை இந்த அவையில் பதிவிட விரும்புகிறேன், எதிர்க்கட்சிகள் கடந்த 10 ஆண்டு காலத்தில் நிறைவேற்றாமல் போன அறிவிப்புகளில் மக்களுக்கு மிகவும் பயன்படும் தேவைகள் ஏதேனும் கண்டறியப்பட்டால், “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு” என்ற பேரறிஞர் அண்ணாவின் வாக்கிற்கேற்ப, மக்கள் நலனை மட்டுமே முன்னிறுத்தி அவற்றையும் நாங்கள் நிறைவேற்றுவோம் என்ற உறுதியை அளித்து நன்றி கூறி அமைகிறேன்.

banner

Related Stories

Related Stories