சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை, அதே பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் வசந்த்கிரீஷ் என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி காதலிப்பதாக கூறியுள்ளார்.
வசந்தின் பேச்சைக் கேட்டு பள்ளி மாணவியும் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், மாணவியின் பெற்றோர் வடபழனி மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
பள்ளி மாணவியை அப்பகுதியைச் சேர்ந்த வசந்த்கிரீஷ் மற்றும் அவரது ஆண் நண்பர்கள் சேர்ந்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளனர். இதனையடுத்து போலிஸார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து வசந்த்கிரீஷ் உள்ளிட்ட 4 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த விசாரணையில், பள்ளி மாணவியை வசந்த்கிரீஷ் தனது நண்பர்களான துணை நடிகர் சதீஷ்குமார், தனியார் பல் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் பிரசன்னா, கல்லூரி மாணவர் விஷால் ஆகியோருக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும் மாணவியை போதைக்கு அடிமையாக்கிய இந்த கும்பல், மாணவியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரியவந்தது.
அதுமட்டுமல்லாது, இந்த விவகாரத்தில் வசந்த்கிரீஷின் கல்லூரி நண்பர்களான இரண்டு மாணவிகளுக்கும், பள்ளி மாணவி ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் இணைந்து மாணவியை ஆசை வார்த்தைகளை பேசி நண்பர்களின் உல்லாசத்திற்கு இணங்க வைத்ததாகவும் தெரியவந்தது.
இதனையடுத்து இந்த வழக்கில் அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ளவர்களை போலிஸார் தேடி வருகின்றனர். பள்ளி மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தைக் கூறி, கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.