புதுவை மாநகர சுதந்திர பொன்விழா நகர் குடியிருப்பு மற்றும் மொட்டைத்தோப்பு குடியிருப்பு அருகருகே உள்ளனர். இதில் அரசுக் குடியிருப்பில் ஒரு சமூகத்தினர் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த இரு குடியிருப்புகள் இடையே உள்ளப்பாதையை பொதுபாதையாக அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இதனையடுத்து அந்தவழியை அடைத்து
தடுப்புச்சுவர் எழுப்புவதற்கு பா.ஜ.கவைச் சேர்ந்த சில குடியிருப்புவாசிகள் முடிவு செய்து பணியை தொடங்கினர். அப்போது தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சிபிஐ(எம்) உள்ளிட்ட கட்சியினர் அப்பணியை தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில் மீண்டும் தடுப்புச்சுவர் எழுப்பவதற்கு பூமி பூஜை பா.ஜ.க எம்.எல்.ஏ ஜான்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது சிபிஐ(எம்) கட்சியினர் அதனை தடுத்து நிறுத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ச்சியாக அங்கு புதுச்சேரி மாநகர கிழக்கு காவல் கண்காணிப்பாளர் தீபிகா, வடக்கு காவல் கண்காணிப்பாளர் சுபம் கோஷ் மற்றும் ஏராளமான போலிஸார் குவிக்கப்பட்டனர் . இதனிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமையில் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் அங்கு குவிந்ததால் பெரும் பதட்டம் ஏற்பட்டது.
பின்னர் உதவி மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தாசில்தார் ராஜேஷ் கண்ணா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு தரப்பினர் இடையே சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. பின்னர் அரசு உயர் அதிகாரிகளின் பேச்சு வார்த்தைக்கு பின்னர் தடுப்பு சுவர் அகற்றப்பட்டது. அதன் பிறகே அந்த பகுதியில் அமைதி திரும்பியது