கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. சென்னையில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையில் உள்ள மெரினா, எலியட்ஸ் கடற்கரைகள் உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளுக்கும் பொதுமக்கள் செல்லத் தடை விதித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை பொதுமக்களுக்கு மணல் பரப்பில் அனுமதியில்லை என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
நடைபயிற்சி செல்வோருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுவதாகவும், மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்கான தனிப் பாதையில் மட்டுமே அனுமதி என்றும் சென்னை மாநகராட்சி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த புதிய கட்டுபாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கடற்கரையில் மணல் பரப்பில் செல்வோரை காவல்துறையினர் வெளியேற்றி வருகின்றனர். மேலும் உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் கடற்கரை நடைபாதையில் வழக்கம் போல் தங்கள் பயிற்சிகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்தமைக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.