கரூர் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த 'நிலவள வங்கி' திட்டம் தொடங்கப்பட உள்ளதாகவும் , இதில் இளம் தொழில் முனைவோர் பங்கெடுத்து வளர்ச்சி பணிகளுக்கு முன்வர வேண்டும் என அமைச்சர் செந்தில்பாலாஜி கேட்டுக்கொண்டார்
கரூர் மாவட்டத்தில் சமூக நல செயல்கள் புரிந்து வரும் 'இளம் இந்தியர்கள்' அமைப்பின் வளர்ந்து வரும் ஆர்வமிக்க இளம் தொழில் முனைவோர் முதலாம் ஆண்டு விழா தனியார் அரங்கத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் கலந்துகொண்டு இளம் தொழில் முனைவோர்களை உற்சாகப்படுத்தி தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.
அப்போது, 'தமிழக முதல்வர் தனது 50 ஆண்டுகால தொடர் முயற்சியின் காரணமாக தற்போது தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்கிறார். குறிப்பாக தொழில்துறையில் அவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். வளர்ச்சித் திட்டங்களை துரிதமாக அறிவித்து தொழில் முனைவோர்களுக்கு தேவையான முன்னெடுப்புகளை செய்து வருகிறார்.
கோவை விமான நிலையம் விரிவாக்கத் திட்டத்திற்கும், திருச்சி - கரூர்- கோவை பசுமை வழி விரிவாக்கத் திட்டத்திற்கும் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல கரூர் மாவட்டத்தில் அமைய உள்ள 200 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிக்கும் , 110 ஏக்கரில் அமையவுள்ள வேளாண்மைக் கல்லூரி திட்டத்திற்கும் இடங்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக 'நில வள வங்கி' திட்டத்தை மாவட்ட நிர்வாகம் தொடங்க உள்ளது. இத்திட்டத்தில் இளம் தொழில் முனைவோர்கள் சேர்ந்து வளர்ச்சி திட்டப் பணிகளுக்காக உதவிட முன்வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் தொழில் முனைவோர்கள் தங்களது கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழக அரசு துணை நிற்கும் என்றும் அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மற்றும் இளம் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.