சென்னையை அடுத்த, அனகாபுத்தூர் செங்குட்டுவன் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். விநாயகர் சதுர்த்தியன்று ராஜேந்திரன் கோவிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, அவருக்கு அவசரமாகச் சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டதால் சீனிவாசன் என்பவரின் வீட்டின் எதிரே சிறுநீர் கழித்துள்ளார். அந்நேரம் வீட்டில் இருந்து வெளியே வந்த சீனிவாசன், ராஜேந்திரனை திட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆவேசமடைந்த சீனிவாசன் அங்கிருந்த உருட்டுக் கட்டையை எடுத்து ராஜேந்திரன் தலையில் பலமாக அடித்துள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த ராஜேந்திரனை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 17ஆம் தேதி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் தலைமறைவாக இருந்த சீனிவாசனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுநீர் கழித்ததால் ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.