தமிழ்நாடு

”உங்க நாட்டுல தடையில்லை; ஆனா இங்க அப்படி இல்லை” - ஏர்போர்ட் அதிகாரிகளின் விசாரணையால் வெளவெளத்து போன பயணி!

துபாய் செல்ல வந்த இந்தோனேசியா நாட்டை சோ்ந்த கப்பல் கேப்டனிடமிருந்து, தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போனை சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து, போலீசில் ஒப்படைத்தனர்.

”உங்க நாட்டுல தடையில்லை; ஆனா இங்க அப்படி இல்லை” - ஏர்போர்ட் அதிகாரிகளின் விசாரணையால் வெளவெளத்து போன பயணி!
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை சா்வதேச விமான நிலையத்திலிருந்து எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானம் இன்று காலை துபாய்க்கு புறப்பட தயாரானது. இந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளை பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பினா். அப்போது இந்தோனேசியா நாட்டை சோ்ந்த ஒரு பயணியை பரிசோதித்தனா். அவரிடம் நமது நாட்டில் தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போன் ஒன்று இருந்ததை கண்டுப்பிடித்தனா். இதையடுத்து அவரை பயணம் செய்ய அனுமதிக்காமல் நிறுத்திவைத்து விசாரணை செய்தனா்.

இந்தோனேசியா நாட்டை சோ்ந்த அவா், கப்பல் கேப்டனாக பணியாற்றுகிறாா். கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டு சரக்கு கப்பல் ஒன்றுக்கு கேப்டனாக கடல் மாா்க்கமாக சென்னை வந்துள்ளாா். அப்போது அவா் சேட்டிலைட் போனுடன் வந்துள்ளாா். மேலும் அவா்கள் நாட்டில் சேட்டிலைட் போனுக்கு தடை கிடையாது. எனவே எடுத்து வந்துள்ளதாக கூறினாா்.

ஆனால் பாதுகாப்பு அதிகாரிகள், எங்கள் நாட்டில் சேட்டிலைட் போன்கள் உபயோகிக்க அனுமதியில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக, எங்கள் நாட்டில் சேட்டிலைட் போன் உபயோகிப்பதை எங்கள் நாட்டு அரசு தடை செய்துள்ளது. தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போனுடன் வந்ததும், முறைப்படி எங்கள் நாட்டு அதிகாரிகளான சுங்கத்துறையிடம் ஒப்படைத்துவிட வேண்டும். உங்கள் நாட்டிற்கு மீண்டும் திரும்பி செல்கையில், போனை வாங்கி செல்ல வேண்டும் என்பது தான், எங்கள் நாட்டு விதிமுறை.

அதை மீறி நீங்கள் செயல்பட்டுள்ளீா்கள். உங்களுடைய சேட்டிலைட் போனை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்காமல், நீங்களே வைத்து உபயோகித்துள்ளீா்கள். எனவே உங்களிடமிருந்து சேட்டிலைட் போனை பறிமுதல் செய்கிறோம் என்று கூறினா். அதனையடுத்து இந்தோனேசியா நாட்டு கப்பல் கேப்டனிடமிருந்து சேட்டிலைட் போனை பறிமுதல் செய்து, அவா் அந்த போனை இந்தியாவில் உபயோகப்படுத்தி யாரிடமெல்லாம் பேசியுள்ளாா்? அவா் எங்கு தங்கியிருந்தாா் என்று விசாரித்து ஆய்வு செய்கின்றனா்.

அதோடு அவரிடம் பாதுகாப்பு அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தினா். அதன் பின்பு அவரை பாதுகாப்பு அதிகாரிகள் சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனா். போலீசாா் அவருடைய செல்போனை தொடா்ந்து ஆய்வு செய்கின்றனா். மேலும் இந்தோனேசியா தூதரகத்திற்கும் தகவல் கொடுத்துள்ளனா். வெளிநாட்டை சோ்ந்த கப்பல் கேப்டன் ஒருவரிடம், தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories