தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 10 ஆண்டுகளாக கேள்வி நேரத்தில் முதலமைச்சர் சார்ந்த துறைகள் இடம்பெறாமல் இருந்த நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக கேள்வி நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 10 ஆண்டுகாலமாக முதலமைச்சர் சார்ந்த துறைகள் கேள்வி நேரத்தில் இடம்பெறாமல் இருந்தது. தற்போது, கேள்வி நேரத்தில் முதலமைச்சர் சார்ந்த துறைகளுக்கு பதில் வேண்டும் என்று எம்.எல்.ஏ.,க்கள் விடுத்த கோரிக்கை ஏற்கப்பட்டது.
இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தில், போதைப் பொருள் தடுப்பு தொடர்பாக பா.ம.க எம்.எல்.ஏ ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் மு.க்.அஸ்டாலின் பதிலளித்தார்.
தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தி.மு.க அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து, ஆகஸ்ட் 28 வரை தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாகக் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனை விற்பவர்கள், கடத்துபவர்கள் ஆகியோர் மீது 10 ஆயிரத்து 673 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன; 11 ஆயிரத்து 247 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து 149.43 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 113 நான்கு சக்கர வாகனங்களும், 106 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 15 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்றது மற்றும் கடத்தியது தொடர்பாக 2,458 வழக்குகள் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் பதிவு செய்யப்பட்டு, 5,793 கிலோ கஞ்சா மற்றும் இதர போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 3,413 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களில் 81 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
போதைப் பொருட்கள் விற்பனை செய்வோர் மற்றும் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, போதைப் பொருள் விற்பனை முற்றிலும் தடுக்கப்படும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.