தமிழ்நாடு

“விவசாயத் துறையில் தமிழ்நாட்டை தலைநிமிர வைக்கும் தி.மு.க அரசு”: தமிழக வேளாண் பட்ஜெட் முழு விவரம்!

2021-2022 ஆம் ஆண்டில் வேளாண்மை மற்றும் சார்புத்துறைகளுக்கு என்று ரூ.34,220.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

“விவசாயத் துறையில் தமிழ்நாட்டை தலைநிமிர வைக்கும் தி.மு.க அரசு”: தமிழக வேளாண் பட்ஜெட் முழு விவரம்!
DIGI TEAM 1
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது, தி.மு.க ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

அதன்படி, தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக இன்று காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசின் வேளாண்துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையை காகிதமில்லா இ-பட்ஜெட்டாக, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (ஆக. 14) காலை 10 மணி முதல் கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்து பேசினார்.

அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு : -

2021-2022 ஆம் ஆண்டில் வேளாண்மை மற்றும் சார்புத்துறைகளுக்கு என்று ரூ.34,220.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், சர்க்கரைத்துறை, விதைச்சான்று மற்றும் அங்கசான்றளிப்புத்துறை கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளம், கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வனத்துறை, நீர்வள ஆதாரத்துறை, கூட்டுறவுத்துறை, பால்வளத்துறை போன்ற உழவர் நலன் சார்ந்த துறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் பலன்கள் ஒட்டு மொத்த கிராம வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஒருங்கிணைக்கப்படும். இதற்காக ஒட்டுமொத்தமாக ரூ.34,220.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஐந்து ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் "கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்" அறிமுகம். நடப்பாண்டில் 2500 கிராமங்களில் நீர் ஆதாரங்களை உருவாக்கி, சாகுபடிப் பரப்பினை உயர்த்தி, விவசாயிகளின் வருமானம் உயர்வதற்கான திட்டப்பணிகளுக்காக ரூ.250 கோடி மாநில நிதியிலிருந்து ஒதுக்கீடு. ஒன்றிய, மாநில அரசுத் திட்டங்களை ஒன்றிணைத்து, ரூ.995.45 கோடி, ஆக மொத்தம் ரூ.1,245.45 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்.

நெல் விவசாயிகளின் நலனுக்காக, நெல்லிற்கான கொள்முதல் விலை சாதாரண இரகத்திற்கு குவிண்டாலுக்கு ரூ.2,015 ம், சன்ன இரகத்திற்கு குவிண்டாலுக்கு ரூ.2,060 என உயர்த்தி நிர்ணயம். இதற்காகும் கூடுதல் செலவினத்தொகை ரூ.99.38 கோடி, ஆக மொத்தம்ரூ.319.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறு, குறு விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும், பயிர் சாகுபடி மட்டுமல்லாது இதர தொழில்களையும் மேற்கொண்டு, ஆண்டு முழுவதும் வருமானம் ஈட்ட வல்ல ஒருங்கிணைந்த பண்ணையம், கூட்டுப்பண்ணையத்திற்காக ரூ. 119.402 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளின் பம்ப்செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்காக தமிழ்நாடு மின்வாரியத்திற்கு ரூ. 4,508.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பயிர்க் காப்பீட்டுத்திட்டத்தில் விவசாயிகளின் சார்பாக, காப்பீட்டுக் கட்டண மானியத்தில் மாநில அரசின் பங்காக ரூ.2,327 கோடி நிதி ஒதுக்கீடு, முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டத்திட்டத்தின் மூலம் ஒரு இலட்சம் மாடித்தோட்ட தளைகள் விநியோகம், காய்கறி விதைத் தளைகள் விநியோகத்திற்காக ரூ.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நுண்ணீர் பாசனத்திட்டத்தின்கீழ், சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும் தொடர்ந்து மானியம் வழங்கி, 1,50,000 எக்டரில் செயல்படுத்திட ரூ. 982.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், நடப்பாண்டில், தொகுப்பு அணுகுமுறையில் 7.5 இலட்சம் ஏக்கர் மானாவாரி நிலங்களில் 3 இலட்சம் விவசாயிகள் பலன்பெறும் வகையில், ரூ,146.64 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரூ.140 கோடி மானியத்தில் வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டம் செய்ல்படுத்தப்படும்.முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின் கீழ், 70 சதவிகித மானியத்தில் 5,000 விவசாயிகள் பயன்பெறுவதற்கு ரூ. ரூ.114.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் ஆராய்ச்சி மற்றும் வேளாண் கல்வியை வலுப்படுத்துவதற்கு ரூ. 573.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் உள்ள வளங்குன்றா வேளாண்மைக்கான துறை ‘நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்’ என பெயர் மாற்றம் செய்து, நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மைக்கான ஆராய்ச்சி மையம் உருவாக்கி இயற்கை வேளாண்மை தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளை வலுப்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மண் வளத்தை பாதுகாத்து, ஆரோக்கியமான உணவை மக்களுக்கு வழங்குவதற்காக இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டம் ரூ.33.03 கோடியில் செயல்படுத்தப்படும்.

பாரம்பரிய நெல் வகைகளைத் திரட்டி, பாதுகாத்து, விதை உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு விநியோகம் செய்யும் வகையில், நெல் ஜெயராமன் அவர்களின் மரபுசார் நெல் இரகங்கள் பாதுகாப்பு இயக்கம் உருவாக்கப்பட்டும்!

வேளாண்மை பட்டதாரிகள் மற்றும் இதர இளைஞர்கள் வேளாண்மை பணிகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில் ரூ.7.68 கோடியில் செயல்படுத்தப்படும். திறன் மேம்பாட்டு பயிற்சியும் அளிக்கப்படும்.

பனை மரங்களைப் பாதுகாப்பதுடன் கூடுதல் மரங்களை உருவாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளையும் 1 லட்சம் பனங் கன்றுகளையும் முழு மானியத் தொகையுடன் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏரிக் கரைகளிலும் சாலையோரங்களிலும் பனைமரங்களை வளர்ப்பதற்கு மீண்டும் முயற்சிகள் எடுக்கப்படும். இன்று மக்கள் அதிகம் விரும்பும் பொருட்களாக பனங்கற்கண்டு, பதநீர், கருப்பட்டி போன்றவை விளங்குகின்றன. அவற்றைக் கலப்படமில்லாமல் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தால் மிகுந்த வரவேற்பைப் பெறும். இத்துறை பனைமரங்களைப் போற்றிக் காக்கும் உன்னதப் பணியை உன்னிப்பாக மேற்கொள்ளும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பனைமரம் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

பனை வெல்லம் உற்பத்தி தொடர்பான நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, தரமான பனை வெல்லம் தயாரிப்பதற்கு விவசாயிகளுக்கு உரிய பயிற்சியும், பனங்கருப்பட்டி காய்ச்சும் நவீன இயந்திரம் கொள்முதல் செய்திட மானியமும் வழங்கப்படும்.

மேலும், பனை மரத்திலிருந்து எடுக்கப்படும் மதிப்புக் கூட்டுப்பொருளான பனை வெல்லத்தினைப் பனை வாரியம், வேளாண் கூட்டுறவு சங்கங்களுடன் ஒருங்கிணைந்து நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழர்களின் வாழ்வோடும், மொழியோடும், வளத்தோடும், ஒன்றுபட்டு, மழை ஈர்ப்பு மையம், நீர் நிலைகளின் காவலன் என்றும் அழைக்கப்படும் பனை மரத்தினை, வேரோடு வெட்டி விற்கவும், செங்கல் சூளைகளுக்குப் பயன்படுத்தும் செயலினைத் தடுக்க இவ்வரசால் உத்தரவு பிறப்பிக்கப்படும்.

தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பனைமரங்களை வெட்ட நேரும் நிகழ்வுகளில், மாவட்ட ஆட்சியர் அனுமதி பெறவேண்டியது கட்டாயமாக்கப்படும். பனை மேம்பாட்டு இயக்கம் 3 கோடி ரூபாய் செலவில் மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள், தென்னை, பருத்தி, பழங்கள் போன்ற பயிர்களின் சாகுபடி பரப்பினை அதிகரிக்கவும், உற்பத்தியை உயர்த்தவும் மொத்தமாக ரூ.300.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கரும்பு விவசாயிகளின் நலனுக்காக, கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ42.50, கூடுதல் “சிறப்பு ஊக்கத்தொகையாக” டன் ஒன்றுக்கு ரூ.150/- வழங்குவதற்கு ரூ.178.83 கோடி நிதி, கரும்பு உற்பத்திக்கான சிறப்புத்திட்டத்திற்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேளாண்மையின் மகத்துவத்தை இளைஞர்கள் அறிந்து கொள்ளும் வகையில், சென்னையில் மரபுசார் வேளாண்மைக்கான அருங்காட்சியகம் அமைக்கப்படும்

மண்வெட்டி, களைக்கொத்து, இரும்புச்சட்டி, கடப்பாரை, கதிர் அரிவாள் அடங்கிய "வேளாண் உபகரணங்கள் தொகுப்பு" அரை இலட்சம் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இயற்கை வேளாண்மை, ஏற்றுமதி, புதிய கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு மாநில அளவிலான பரிசு வழங்கப்படும்.

வேளாண் தொடர்பான பல்வேறு முக்கிய பிரச்சினைகளை அவ்வப்போது ஆய்வு செய்து, தீர்வு காண மாநில அளவில் தலைமைச் செயலாளர் அவர்களின் தலைமையில் உயர்நிலைக்குழு.

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த, எலுமிச்சை, முருங்கை, கறிவேப்பிலை, கற்பூரவல்லி, திப்பிலி, கற்றாழை, புதினா போன்ற மருத்துவ குணம் கொண்ட மூலிகைச் செடிகள் அடங்கிய இரண்டு இலட்சம் ஊட்டச்சத்துத் தளைகள் வழங்கும் திட்டத்திற்காக ரூ.2.18 கோடி நிதி ஒதுக்கீடு.

திருவள்ளூர், கடலூர், நாமக்கல், தென்காசி மாவட்டங்களில் தோட்டக்கலை பயிர்களுக்கு சிறப்புக் கவனம் செலுத்த ரூ.12.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் பலாவிற்கான சிறப்பு மையம் துவக்கப்படும். கடலூர் மாவட்டம் வடலூரில் புதியதாக அரசு தோட்டக்கலை பூங்கா அமைக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறைந்த வாடகையில் இயந்திரங்களை வழங்கும் திட்டத்தினை, வலுப்படுத்துவதற்காக, ரூ. 23.29 கோடியில் நவீன வேளாண் இயந்திரங்கள் கொள்முதல் செயல்படுத்தப்படும். மழை நீரினை சேமித்து, பயிர் உற்பத்தியை பெருக்க விவசாயிகளின் வயல்களிலேயே 500 பண்ணைக்குட்டைகள் அமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மூன்று ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார் பம்பு செட்டுகள் வாங்க, ரூ.10,000 /- வீதம் 1,000 விவசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போதுள்ள 50 உழவர் சந்தைகளை புனரமைக்க ரூ.12.50 கோடி, புதிதாக 10 உழவர் சந்தைகளை உருவாக்க ரூ. 6 கோடி ஒதுக்கீடு. 2007-08 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 40 வேளாண் விளைபொருட்களுக்கு ஒரே சீராக உறுதி அறிவிக்கை.

ஈரோடு, திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர், விழுப்புரம், தஞ்சாவூர், கடலூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விளைபொருளை சேமிக்கவும், பரிவர்த்தனை செய்வதற்கான வசதிகள் செய்து தருவதற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம், பண்ருட்டி ஆகிய இரண்டு இடங்களில் 10 கோடி ரூபாய் செலவில் குளிர்பதனக் கிடங்குகள் அமைக்கப்படும். நாமக்கல் மாவட்டம் கொல்லி மலை பகுதியில் பழங்குடி விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் மிளகினை பதப்படுத்தி சேமித்து வைக்க பரிவர்த்தனைக்கூடம், உலர்களத்துடன் கூடிய பதப்படுத்தும் மையம் அமைக்க ரூ.50 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி, எடப்பள்ளி கிராமத்தில் ரூ.2 கோடி மதிப்பில் ‘ஒருங்கிணைந்த கிராம வேளாண் சந்தை வளாகம்’ உருவாக்கப்படும். கடலூர், விழுப்புரம், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.3.5 கோடி மதிப்பில் 28 உலர்கலங்கள் உருவாக்கப்படும்.

விவசாயிகளுக்கு ஏற்றுமதி குறித்த விவரங்கள், விற்பனை வாய்ப்புகள், தரச் சான்றுகள் பெறும் முறைகள் போன்றவற்றை ஒருங்கிணைத்து வழங்கிட சென்னை, கிண்டியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் வேளாண் ஏற்றுமதி சேவை மையம் அமைக்கப்படும்.

முதன்முறையாக ஏற்றுமதியாளராகப் பதிவு செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் APEDA தரச்சான்று ஆய்வுக்கு 50 சதவிகித மானியம் வழங்கப்படும். ஈரோடு மாவட்டம் தாளவாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் சேமிப்புக் கிடங்கு, பரிவர்த்தனைக்கூடம், கூட்டரங்குடன் கூடிய அலுவலகக் கட்டடம், மின்னணு எடை மேடை ஆகிய கட்டமைப்பு வசதிகள் அமைத்துத் தர 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

முருங்கை அதிகளவில் விளையும் தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, அரியலூர், திருப்பூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகள் ’முருங்கைக்கான ஏற்றுமதி மண்டலமாக’ அறிவிக்கப்படும். மதுரையில் முருங்கைக்கென சிறப்பு ஏற்றுமதி சேவை மையம் அமைத்து, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்திட உலர்த்திகள் (Driers), இலைகளை பொடியாக்கும் இயந்திரங்கள் (Pulveriser), தானியங்கி சிப்பம் கட்டும் இயந்திரம் போன்ற கட்டமைப்பு வசதிகள் அமைத்துத் தர ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் கொளத்தூர் பகுதியில் விளைபொருட்கள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களுக்கான நவீன விற்பனை மையம் துவங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மின்னணு ஏலம் மூலம் விவசாயிகள் தங்களின் விளைபொருளுக்கு உரிய விலை பெற இணையதளம் மற்றும் சிறப்பு மென்பொருளுக்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கொல்லிமலை மிளகு, பண்ருட்டி பலா, மண்ணச்ச நல்லூர் பொன்னி அரிசிக்கு புவிசார் குறியீடு பெற அரசு நடவடிக்கை எடுக்கப்படும். உணவுப்பதப்படுத்துதலுக்கு தனிக்கவனம் செலுத்தி முன்னேற்றுவதற்காக, உணவுப் பதப்படுத்துதலுக்கென தனி அமைப்பு.

மீன் பதப்படுத்துதலுக்கு நாகப்பட்டினம், தேங்காய்க்கு கோயம்புத்தூர், வாழைக்கு திருச்சி, மஞ்சளுக்கு ஈரோடு, சிறு தானியங்களுக்கு விருதுநகர் என ஐந்து தொழில்கற்கும் மையங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் மஞ்சள் பயிருக்கான ஆராய்ச்சி மையம் அமைக்க 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் தோட்டக்கலைக் கல்லூரி புதியதாக துவங்குவதற்கு முதற்கட்ட நிதியாக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் வழி பயிலும் மாணவர்களில் வசதிக்காக தமிழில் வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்வி அறிமுகம் செய்யப்படும்.

வேளாண்மையில், தொழில் முனைவோர்களை ஈர்க்க, வேளாண் தொழில் முனைப்பு மையம் (Agri incubation Centre) வலுப்படுத்தப்படுவதுடன் தேவையான இடங்களில் தொழில் முனைப்பு மையம் (Agri incubation Centre).

காவேரி டெல்டா வேளாண் பெருமக்கள் மற்றும் வேளாண் தொழிலாளர்களின் வாழ்வு வளமாக, திருச்சி - நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இடையேயான பகுதியை வேளாண் தொழிற்சாலைகளுக்கான பெருந்தடமாக (Agro Industrial Corridor) அறிவிக்கை உருவாக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

Related Stories