தமிழ்நாடு

“முந்தைய அ.தி.மு.க அரசு ஒரு யூனிட் மின்சாரம் கூட தயாரிக்கவில்லை” : அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம்சாட்டு!

முந்தைய அ.தி.மு.க அரசு ஒரு யூனிட் மின்சாரத்தை கூட தயாரிக்கவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.

“முந்தைய அ.தி.மு.க அரசு ஒரு யூனிட் மின்சாரம் கூட தயாரிக்கவில்லை” : அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கடந்த ஆட்சியில் அ.தி.மு.க அரசு ஒரு யூனிட் மின்சாரத்தை கூட தயாரிக்கவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.

விழுப்புரத்தில் மின் வினியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. இதில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, “கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மிஷன் 2000 என அ.தி.மு.க அரசால் தொடங்கப்பட்டு அதில் மின்சார வாரியத்துக்கு என 4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அந்த நிதியில் ஒரு யூனிட் மின்சாரம் கூட தயாரிக்கவில்லை.

எந்த ஒரு புதிய திட்டத்தையும் அ.தி.மு.க அரசு ஆரம்பித்து நடைமுறைப்படுத்தவில்லை. மாறாக மின்சாரத் துறைக்கு ஒதுக்கிய நிதியை ஊழல் செய்துள்ளனர்.

தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போது அதிக கடன் சுமையில் இருக்கிறது. அதனைக் குறைக்கின்ற வகையில் மின்சார வாரிய அதிகாரிகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.” எனப் பேசினார்.

முன்னதாக தலைமை உரையாற்றிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இதுபோன்ற கருத்து கேட்பு கூட்டங்கள் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஏதும் நடைபெறவில்லை. தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றவுடன் இதுபோன்ற ஆய்வுக் கூட்டங்களை நடத்தி தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கு வித்திட்டுள்ளதாக புகழாரம் சூட்டினார்.

பின்னர் பேசிய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான், “சட்டமன்றத்தில் அ.தி.மு.க எடுத்துக் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சரும் மின்வாரியத்துறை அதிகாரிகளும் உரிய விளக்கம் அளித்ததன் பேரில் அ.தி.மு.கவினர் இன்று வரைக்கும் அது குறித்துப் பேசவில்லை” என்றார்.

இந்தக் கூட்டத்தில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த மின்வாரியத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு தங்கள் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் செய்து முடிக்கப்பட்ட பணிகளின் விபரங்களை தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் துணை தலைவர் பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொன் கவுதம சிகாமணி, ரவிக்குமார், அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, உதயசூரியன், லட்சுமணன், மணிகண்ணன், வசந்தம் கார்த்திகேயன், சரவணன், கிரி, ஜோதி, அம்பேத்கர், சிந்தனை செல்வன் ஆகியோரும், அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர்.

banner

Related Stories

Related Stories