பசுமை சைதை திட்டத்தின் 5ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சென்னை சைதாப்பேட்டை வ.வூ.சி தெருவில், இன்று பிறந்தநாள் காணும் குழந்தைகளின் பெயரில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது,
தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை பெறப்பட்ட தடுப்பூசிகள் 1,50,26,050. தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 46 லட்சத்தி 33,635 போடப்பட்டுள்ளது. மேலும் இன்று மாலை 6 லட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளது. பொது மக்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ள மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 150 மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்றும் அவர்களை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலோ, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையிலோ, அல்லது மதுரை அரசு மருத்துவ கல்லூரியிலோ சேர்த்து கொள்ளலாம் என்று ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
அண்டை மாநிலமான புதுச்சேரியில் தமிழ்நாடு மாணவர்களை சேர்ப்பதும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ப்பதும் அல்லது அரசு கலை கல்லூரிகளில் மருத்துவமனையில் சேர்ப்பதும் சூழலுக்கு பொருந்தாது என்பதினால் மாற்று ஏற்பாடாக தமிழ்நாட்டில் மதுரை தேனி, சிவகங்கை, தூத்துக்குடி திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள பிற அரசு மருத்துவ கல்லூரிகளில் அவர்களை பிரித்து சேர்ப்பதற்கான யோசனைகள் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இது குறித்து ஒன்றிய அரசிடம் ஒப்புதல் பெற்று மாணவர் சேர்க்கை நடைபெரும்.
எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டுவதில் காலம் தாழ்த்தப்பட்டதற்கு கடந்த ஆட்சியில் இருந்த அதிமுக அரசே காரணம். அதிமுக ஆட்சி காலத்தில் தரப்பட்டிருக்க வேண்டிய அழுத்தத்தை தமிழக முதல்வர் ஆட்சிக்கு வந்த ஒன்றரை மாதத்தில் தந்துகொண்டிருக்கிரார். தமிழ்நாடு அரசின் முயற்சிக்கும் ஒன்றிய அரசு ஒத்துழைப்பு அளிக்கும்.
தமிழ்நாட்டில் டெல்டா பிளஸ் தொற்றால் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை. இதுவரை பாதிக்கப்பட்ட 10 நபர்கள்களில் 9 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.”
என தெரிவித்துள்ளார்.