இந்தியாவில் நடைபெறுவதாக இருந்த உலகக்கோப்பை டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை சற்றே ஓய்ந்திருந்தாலும் மூன்றாவது அலைக்கான அபாயம் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடைசியாக 2016 ஆம் ஆண்டு உலகக்கோப்பை டி20 தொடர் நடைபெற்றிருந்தது. அதில், இங்கிலாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக்கோப்பையை வென்றிருந்ததது. 2016 க்கு பிறகு சாம்பியன்ஸ் ட்ராஃபி, ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை போன்றவை அடுத்தடுத்து நடைபெற்றதால் டி20 உலகக்கோப்பை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
கடந்த 2020 ம் ஆண்டு நவம்பரில் ஆஸ்திரேலியாவில் உலகக்கோப்பை டி20 தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா பரவல் உச்சமடைந்ததால் உலகக்கோப்பை தொடர் இந்த ஆண்டிற்கு தள்ளிவைக்கப்பட்டது.
கொரோனா பரவல் மட்டுமே இதற்கு காரணம் என எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் உலகக்கோப்பை திட்டமிடப்பட்டிருந்த சமயத்திலேயே ஐ.பி.எல்லும், இந்தியா-ஆஸ்திரேலியா தொடரும் நடந்து முடிந்தது. பிசிசிஐயும் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் உலகக்கோப்பையை நடத்துவதை விட ஐ.பி.எல்-ஐயும், இந்தியா-ஆஸ்திரேலியா தொடரை நடத்துவதிலுமே குறியாக இருந்தனர்.
உலகக்கோப்பையை நாங்கள் நடத்தவில்லை அதைவிட இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்தான் வருமானரீதியாக பெரும்பலனை கொடுக்கும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளிப்படையாக கூறியது. இதனால், வேறு வழியின்றி இந்த ஆண்டிற்கு உலகக்கோப்பை தள்ளி வைக்கப்பட்டது.
இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த உலகக் கோப்பைதான் தற்போது அரபு நாடுகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடர் வீரர்களுக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டு தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.
ஒருவேளை இந்த தொடர் முழுமையாக பாதுகாப்பாக நடத்தப்பட்டிருந்தால் உலகக்கோப்பையையும் இந்தியாவிலேயே நடத்த பிசிசிஐ முழுமனதோடு இறங்கியிருக்கும். ஆனால், ஐ.பி.எல் மாதிரி தொடருக்கு இடையில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் என்ன செய்வது? என்கிற கேள்வி எழுந்ததாலயே உலகக்கோப்பை அரபுநாடுகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காலக்கட்டத்தில் கிரிக்கெட் போட்டிகளுக்கு ஆபத்பாந்தவனாக இருப்பது அரபுநாடுகளே. வீரர்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்து எந்தவித பாதிப்பும் இல்லாமல் தொடரை நடத்தி முடித்துவிடுகிறார்கள். இதனாலயே பல கிரிக்கெட் தொடர்களும் அரபு நாடுகளுக்கு மாற்றப்பட்டு வருகிறது. கடந்த 2020 ஐ.பி.எல் போட்டி அங்கேதான் நடைபெற்றது.
இந்த ஆண்டு மீதமிருக்கும் ஐ.பி.எல் போட்டிகளும் அங்கேதான் நடைபெற போகின்றன. பாகிஸ்தான் சூப்பர் லீக் அங்கேதான் நடைபெற்றது. இப்போது டி20 உலகக்கோப்பைகளும் அங்கேதான் நடக்கப்போகின்றது. இந்த உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- உ.ஸ்ரீ