நீட் வராது என கூறி மக்களை ஏமாற்றியது ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் அதிமுகவும்தான் என மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில் பொதுமக்கள் 1000 பேருக்கு மளிகை பொருட்கள் அடங்கிய கொரோனா நிவாரண பொருட்கள் மற்றும் 200 ரூபாய் பணத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், முதலமைச்சர் அறிவுறுத்தல் பேரில் கடந்த ஆண்டு மார்ச் முதல் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம். 1000 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் பொதுமக்களுக்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கி வருகிறோம். கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டுமென்றால் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்தும், தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் நீட் வராது என கூறி மக்களை ஏமாற்றியவர் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அதிமுகவினர். முதலமைச்சர் சொன்னதை செய்வார், தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை போல் சட்ட ரீதியாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.
கொரோனா பரவலை அலட்சியமாக கையாண்ட தேர்தல் ஆணையம் மீது நடவடிக்கை எடுக்க நாடாளுமன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்படுமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளை பேச விட வேண்டும் என்றும் கொரோனா பரவலை அலட்சியமாக கையாண்ட தேர்தல் ஆணையம் குறித்து கேள்வி எழுப்புவோம் என கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு கொரோனா காலத்தில் தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில் பணிபுரிவோர் நிலைமையை ஆராய்ந்து நிவாரணம் அளிப்பது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என தெரிவித்தார்.
முன்னதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள இளங்காளியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ஆய்வு மேற்கொண்டார் அப்போது அவருடன் அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.