தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதேநேரத்தில், 18 வயதிலிருந்து 45 வயது வரை உள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் போதிய அளவில் தடுப்பூசி வழங்கவேண்டிய மத்திய அரசு மாநில அரசுகள் தமது தேவைக்கேற்ப வெளியில் கொள்முதல் செய்துக்கொள்ளலாம் என அறிவித்தது.
இதனால் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதால் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டு பல இடங்களில் இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 12ம் தேதி நடைபெற்றக் கூட்டத்தில், தடுப்பூசி தேவைக்காக கொள்முதல் செய்யவும் தமிழக அரசு முடிவெடுத்தது.
ஆனால், அனைவருக்கும் தடுப்பூசி போதிய அளவில் இல்லாததால், உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்து பயன்படுத்தலாம் என்றும் அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டது.
அதன்படி, இன்று தமிழக அரசு தடுப்பூசி தேவைக்காக தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகம் மூலம் உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி ஒன்றை கோரியுள்ளது.அதில், முதற்கட்டமாக 5 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. மேலும் 90 நாட்களில் இந்த தடுப்பூசிகளை விநியோகம் செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.