தமிழ்நாடு

“மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்” - மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றால் தமிழக அரசு திடீர் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், அனைத்து மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை.

“மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்” - மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றால் தமிழக அரசு திடீர் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், கொரோனா தடுப்பு நடவடிக்கையை செயல்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை 800-க்கும் கீழ் குறையத் தொடங்கியது. தொடர்ந்து குறைந்துவந்த தொற்று, கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது.

தமிழகத்தில் 66 நாட்களுக்கு பின்னர் நேற்று மீண்டும் 800-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 50 நாட்களுக்குப் பின்னர் கொரோனா சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாகி வரும் நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் உயரதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது.

நேற்று தமிழகத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது குறித்தும், மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, வரும் நாட்களில் பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் சமூக விலகலை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

“மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்” - மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றால் தமிழக அரசு திடீர் அறிவிப்பு!

இந்நிலையில், தமிழக அரசு முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அவையாவன:

1. பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதையும், அரசு வெளியிட்ட நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை நிறுவனங்கள் கடைபிடிப்பதையும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு, சுகாதாரத் துறை, காவல் துறை, வருவாய்த் துறையினர் கண்காணிக்க வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது பொது சுகாதார சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்க வேண்டும்.

2. அலுவலகங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உணவகங்கள் போன்ற பொது இடங்களுக்கென ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள தெளிவான நெறிமுறைகள்படி கிருமி நாசினி உள்ளதா எனவும், மக்களுக்கு காய்ச்சல் உள்ளதா என பரிசோதனை செய்ய உறுதிபடுத்த வேண்டும்.

3. மேற்சொன்ன நெறிமுறைகள், அனைத்து இடங்களிலும் (நிறுவனங்கள், வங்கிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பள்ளிகள், திருமண மண்டபங்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் பின்பற்றப்படுகிறதா என சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் கண்காணிக்க வேண்டும்.

4. கட்டுப்பாட்டுப் பகுதிகளின் நெறிமுறைகளாகிய மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துதல், அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் கூடும் இடங்களாகிய பொது குழாய் இருக்கும் இடம், பொது கழிப்பிடம் போன்ற இடங்களில் கண்கூடாக தெரியும்படி கிருமி நாசினி தெளித்தல், போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

5. கோவிட் தொற்று உள்ளவர்களின் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து, தனிமைப்படுத்தி, பரிசோதனை செய்து மாதிரிகள் எடுக்கவேண்டும். தொற்று உள்ளவர்களுக்கு உரிய நேரத்தில் தாமதமின்றி உரிய சிகிச்சை அளிக்கவேண்டும்.

6. கூட்டாக நோய் தொற்று ஏற்படும் பகுதிகளில் உரிய அலுவலர்களை நியமித்து அதனை உறுதி செய்து தகுந்த நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

7. காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்தி, நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து, தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

8. நோய் தொற்று உள்ள இடங்களில் நோய் தொற்றை தடுக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தி கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.

9. தகுதி வாய்ந்த நபர்களுக்கு தடுப்பூசி செலுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். நோய் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி இதனை விரிவாக்கம் செய்யவேண்டும்.

10. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களை கடந்த ஆண்டைப்போல் கண்காணிக்க வேண்டும்.

11. மக்கள் அதிகமாக கூடும் தேர்தல் பிரச்சார கூட்டங்கள், கலாச்சார, வழிப்பாட்டு மற்றும் இன்னபிற கூட்டங்களுக்கு பொது மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயம், என நிபந்தனை விதித்து அனுமதி அளித்திட வேண்டும். அதனை சம்பந்தப்பட்ட துறையினர் உறுதிபடுத்திட வேண்டும்.

12. மாநிலத்தில் தேர்தல் நடத்துவதற்கான பணிகளின் முக்கிய பங்காக கொரோனா தடுப்புப் பணிகளுக்கு முழுமையாக முக்கியத்துவம் அளித்து நோய்த் தொற்றை குறைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் தொடர்ந்து எடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. பொதுமக்களை பொறுத்தவரை பொது இடங்களில் செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடித்து, அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து சுகாதாரம் பேணவேண்டும். ஏதாவது நோய் தொற்று அறிகுறி இருந்தால் காலதாமதமின்றி உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி இதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டு, தேவையான சிகிச்சை பெற வேண்டும்.

banner

Related Stories

Related Stories