அமராவதி அணையின் நீர்மட்டம் 88 அடியாக உயர்ந்ததை அடுத்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமராவதி அணை அமைந்துள்ளது. அணைக்கு முக்கிய நீர் ஆதாரமாக மேற்கு தொடர்ச்சிமலைகளில் இருந்து வரும் சின்னாறு, பாம்பாறு மற்றும் தேனாறு ஆகியவை உள்ளன.
அமராவதி அணையின் மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் நேரடியாக 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. நிவர் மற்றும் புரெவி புயலின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்த கனமழையால் கடந்த வாரத்தில் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வந்தது.
புரெவி புயலின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக தேனாறு மற்றும் பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கினால் அமராவதி அணைக்கு வினாடிக்கு 7200 கன அடியாக நீர் வந்து கொண்டிருந்தது.
தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் மொத்தமுள்ள 90 அடியில் 88.10 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்ததையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி 5 மதகுகள் வழியாக ஆற்றில் 3,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
உபரி நீர் வெளியேற்றப்படுவதால் திருப்பூர், கரூர் மாவட்டத்தில் ஆற்றின் கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.