புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தேன்மொழி. பெற்றோரை இழந்த தேன்மொழியை 12-ம் வகுப்பு வரை உறவினர்கள் படிக்க வைத்துள்ளனர்.
உறவினர்களின் குடும்பச் சூழல் காரணமாக அடுத்தடுத்த மேற்படிப்பு படிக்க வைக்க பணம் இல்லை என்றதும், தேன்மொழி 12-ம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரியில் படிக்க பணம் இல்லாமல் தவித்து கூலி வேலைக்குச் சென்றுள்ளார்.
மாணவி தேன்மொழியின் நிலையை அறிந்த திராவிட முன்னேற்ற கழகத்தின் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் மருத்துவர் வை.முத்துராஜா கடந்த ஆண்டு கல்லூரி படிப்பதற்கான முழு செலவையும் ஏற்றார்.
இந்நிலையில் மாணவி தேன்மொழிக்கு இரண்டாம் ஆண்டு படிப்புக்கு தேவையான பணத்தை இன்று வழங்கினார். பணத்தை பெற்றுக்கொண்ட மாணவி தேன்மொழி, “வாழ்க்கையில் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மருத்துவர் வை.முத்துராஜா அவர்கள் எனக்கு கல்லூரியில் படிக்க அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் மருத்துவர் வை.முத்து ராஜா அவர்களுக்கும் வாழ்க்கையில் என்றென்றும் நான் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த உதவியை வழங்கிய தி.மு.க புதுக்கோட்டை வடக்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் மருத்துவர் வை.முத்துராஜாவுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். மாணவி தேன்மொழியின் மூன்று ஆண்டு படிப்பு செலவையும் ஏற்று படிப்பு முடிந்த உடன் அவரது மருத்துவமனையில் வேலையும் தருவதாக மருத்துவர் முத்துராஜா உறுதியளித்துள்ளார்.