தமிழகத்தில் ஆட்சியமைத்து வரும் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு, மத்திய அரசு நிறைவேற்றி வரும் பல்வேறு மக்கள் விரோத சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழக மக்களுக்கு துரோகம் விளைவிக்கும் வகையிலான சுரண்டல்களிலும் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில், ஊரடங்கு காலத்தில் வருமானம் இல்லாமல் தவித்து வந்த ஏழை எளிய மக்களிடம் இருந்து மின் கட்டணம் மூலம் கொள்ளையடித்தது போதாமல் தற்போது கட்டுமான பணிக்கான மின் இணைப்பிலும் புதிய விதியை தமிழக மின்பகிர்மான கழகம் ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, கட்டுமான பணி நிறைவுச் சான்று இல்லாமல் மின் இணைப்பு வழங்கப்படமாட்டாது என்ற ஆணையை தமிழக அரசு நீக்கியுள்ளது. இதன்மூலம் சட்டவிரோதமாக கட்டடங்கள் கட்டப்படுவதற்கு வழிவகுக்கும் என எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள தி.மு.க. மக்களவைக் குழுத் துணைத் தலைவர் கனிமொழி, “‘கட்டுமான பணி நிறைவு சான்று’ இல்லாமல் மின் இணைப்பு அளிக்கப்பட மாட்டாது என்ற ஆணையை தமிழக அரசு அவசரமாக நீக்க வேண்டி அவசியம் என்ன?
இந்த விதியையும் நீக்கினால் அனுமதியை மீறி கட்டிடம் கட்டுவோருக்கு என்ன தண்டனை? ஆட்சி முடிய இன்னும் ஆறே மாதங்கள் இருப்பதால் அதற்குள் வசூலை அதிகரிக்கும் பொருட்டா?
நகர்ப்புறங்களில் விதிகளை மீறி கட்டிடம் கட்டுவோருக்கு வசதி செய்து கொடுக்கும் மின்வாரியம், கிராமப்புறங்களில் சிறிய வீடுகளை கட்டுவோரை அலைக்கழிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.