தமிழகத்தில் புதிதாக 56 ஆயிரத்து 278 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 5,609 பேருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், வெளி மாநில, நாடுகளில் இருந்து வந்த 32 பேர் நீங்கலாக தமிழகத்திலேயே இருந்த 5 ஆயிரத்து 577 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மொத்தமாக மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.63 லட்சத்து 222 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் 1,021 பேருக்கும், பிற மாவட்டங்களில் மட்டும் 4,588 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக ராணிப்பேட்டையில் இன்று 382 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதையடுத்து, விருதுநகரில் 348, திருவள்ளூரில் 332, செங்கல்பட்டில் 331, காஞ்சிபுரத்தில் 322, தேனியில் 305, கோவையில் 227, தூத்துக்குடி, குமரியில் தலா 215, திருவண்ணாமலையில் 212 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
முதல் முறையாக ஒரே நாளில் கொரோனா பலி எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 109 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள்.
அதிகபட்சமாக சென்னையில் 20, விருதுநகரில் 9, கோவையில் 7, நெல்லை, தேனி, தென்காசி, சிவகங்கை, காஞ்சிபுரத்தில் தலா 5, செங்கல்பட்டு, மதுரை, புதுக்கோட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, தூத்துக்குடியில் தலா 4 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்திருக்கிறார்கள். மொத்த பலி எண்ணிக்கை 4,241 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஒரே நாளில் இன்று 5,800 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்கள். மொத்தமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 2,283 ஆக அதிகரித்துள்ளது. அதனையடுத்து தற்போது 56 ஆயிரத்து 698 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.