தி.மு.க. செயலாளரும், சைதை சட்டப்பேரவை உறுப்பினருமான மா.சுப்பிரமணியன் எட்டு வடிவ ஓடுதளத்தில் நான்கு மணி நேரம் இடைவிடாது ஓடி "ஆசிய சாதனை" படைத்துள்ளார்.
சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சைதை சட்டப்பேரவை உறுப்பினருமான மா.சுப்பிரமணியன், தமது 55 வயதில் தொடங்கி கடந்த 6 வருடங்களில் இளைஞர்களின் உடற்பயிற்சிக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் மாராத்தான் போட்டிகளில் பல்வேறு வெளிநாடுகள் மற்றும் மாநிலங்களில் 21.1 கி.மீ. தூரத்தை 112 முறை ஓடி, தேசிய, ஆசிய சாதனைகள், மதிப்புறு முனைவர் பட்டம், இன்டெர்நேஷனல் கோல்டன் டிஸ்க் அவார்டு போன்ற சாதனைகளைப் புரிந்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு அனைவரையும் வீட்டிலேயே பூட்டிய நிலையில், மார்ச் 17 முதல் சென்னை மாநகர் முழுவதும் ஊரடங்கினால் உடற்பயிற்சி நிலையங்கள், பூங்காக்கள், ஓடுதளங்கள் அனைத்தும் மூடப்பட்டது. இந்நிலையில் மா.சுப்பிரமணியன் தமது கிண்டி தொழிலாளர் குடியிருப்பு வீட்டின் மொட்டை மாடியில் எட்டு வடிவ ஓடுதளத்தை வரைந்து அதில் தினமும் ஓட்ட பயிற்சி செய்ய தொடங்கினார்.
கடந்த மூன்று மாதங்களாக செய்த பயிற்சி மற்றும் மாரத்தான் சாதனை கொடுத்த ஊக்கத்தில், ஊரடங்கிலும் உடற்பயிற்சி சாதனைக்கு திட்டமிட்டு அதிலும் வெற்றி கண்டார். எட்டு வடிவத்தில் பலரும் நடைப்பயிற்சி செய்கிறார்கள்.
பலர் ஓடவும் செய்கிறார்கள். ஆனால் இதுவரை எட்டு வடிவத்தில் (27.2ft X 15.5ft) அதிக நேரம் அதாவது நான்கு மணி 8 நிமிடம் 18 நொடிகள் இடைநில்லாமல் (Non-Stop Running) 1,010 முறை ஓடியது ஆசிய சாதனையாக ஏற்கப்பட்டு Asia Book of Records புத்தகத்தில் 18.6.2020 அன்று பதிவாகியுள்ளத என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் இந்த சாதனை முயற்சிக்கு பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.