கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு நேற்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,204 ஆக இருந்தது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தமிழகத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,204ல் இருந்து 1,242 ஆக உயர்ந்துள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது :
“தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,204ல் இருந்து 1,242 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 118 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று, சமூகப் பரவலாக இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிறக்கும் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று இல்லாத நிலையில், உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. களத்தில் பணியில் இருக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பாதுகாப்பில் தமிழக அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.
இந்தியாவிலேயே தமிழகத்தின் தான் அதிகமான சோதனை ஆய்வகங்கள் உள்ளன. மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு 30% மானியத்தை கூட தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தைச் சார்ந்த நிறுவனங்கள் மருத்துவ உபகரணங்களைத் தயாரிக்க முன்வர வேண்டும்.
ஒன்றரை லட்சம் நோயாளிகளை குணப்படுத்தக்கூடிய அளவுக்கு மருந்துகள் தமிழக அரசின் கைவசம் உள்ளன. முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு எப்போதும் வராது. உரிய முறையில் நிதி விடுவிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தனியார் மருத்துவமனைகளில் நிர்வாகங்களை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் தொடர்ந்து பேசி என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.” எனத் தெரிவித்தார்.