நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னையில் கொரோனா உறுதிசெய்யப்பட்டவர்கள் குறித்த தகவல்களை வெளியிட்டு மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி நிர்வாகம் ‘GCC CORONA Monitoring’ எனும் புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வீடுகளில் இருப்பவர்களை அதிகாரிகள் கண்காணிப்பார்கள்.
GCC CORONA Monitoring செயலியை பயன்படுத்துவதும், அது செயல்படுவதும் எப்படி?
1. ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்கள், ப்ளே ஸ்டோரில் `GCC CORONA Monitoring’ செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளவேண்டும்.
2. மொபைல் எண்ணைப் பதிவு செய்து, உங்கள் மொபைலுக்கு வரும் OTP-யை பதிவு செய்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
3. இந்தச் செயலியில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும், சாதாரண காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் கொண்டவர்களுக்கும் தனித்தனி பகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
4. ஒருவருக்கு காய்ச்சல் இருக்கிறது என்றால், அதற்குரிய பகுதியில் ஒரு புகைப்படம் எடுத்து அப்லோடு செய்தால் போதும். நமது இருப்பிடம் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெறும்.
5. உடனடியாக மருத்துவர்கள் தொடர்புகொண்டு பேசுவார்கள். கொரோனா இருப்பதற்கான சாத்தியம் இருப்பதாக மருத்துவர்கள் உணர்ந்தால், அந்தப் பகுதிக்கே மருத்துவக் குழுவை அனுப்பி பரிசோதனை செய்வார்கள்.
6. வீட்டில் தனிப்படுத்தப்பட்டவர்கள், அதற்கான பகுதியில் புகைப்படத்தை அப்லோடு செய்வதன் மூலம் மருத்துவர்கள் தொடர்ந்து அவர்களைக் கண்காணிப்பார்கள்.
சென்னை மாநகராட்சி எல்லைக்குள் வசிக்கும் அனைவரும் இந்த செயலியைப் பயன்படுத்தி, மருத்துவ அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்று அரசுக்கு ஒத்துழப்பு வழங்கவேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.