தமிழ்நாடு

“ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு” : வரும் 27 முதல் டெல்டா மாவட்டங்களில் தொடர் போராட்டம்!

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக டெல்டா மாவட்டங்களில் வரும் 27-ந் தேதியில் இருந்து தொடர் போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன.

“ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு” : வரும் 27 முதல் டெல்டா மாவட்டங்களில் தொடர் போராட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகம் மற்றும் புதுவையில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 244 இடங்களில் ஆய்வு மேற்கொண்டு ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

விழுப்புரம் முதல் புதுச்சேரி வரை 1,794 சதுர கிலோ மீட்டர் தூரம் கிணறுகள் தோண்டப்பட இருக்கின்றன. இதில் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது. அரசியல் கட்சிகள், விவசாயிகள், சேவை சங்கங்கள் அனைவரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தும் திட்டத்தை கைவிட மத்திய அரசு மறுக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில், ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறு அமைக்க சுற்றுச்சூழல் துறை அனுமதியும் பொதுமக்களின் கருத்துக் கேட்பும் தேவையில்லை என திருத்தப்பட்ட அறிக்கையை மத்திய அரசு தனது அரசிதழில் வெளியிட்டது. அரசின் இந்த அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு” : வரும் 27 முதல் டெல்டா மாவட்டங்களில் தொடர் போராட்டம்!

இதனால் மத்திய அரசு இந்த திட்டத்தை தமிழகத்தில் இருந்து திரும்ப பெறவேண்டும் எனக் கூறி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு மற்றும் அதன் தோழமை அமைப்புகள் சார்பில் வரும் 27ம் தேதி முதல் காவிரிப் படுகையில் தொடர் போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

முதற் கட்டமாக மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், மன்னார்குடி, வேதாரண்யம், புதுச்சேரி, காரைக்கால், கடலூர் ஆகிய இடங்களில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த திட்டத்தால் மீனவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகிறது என்பதால் மீனவர்களும் போராட்டத்தில் பங்கேற்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

“ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு” : வரும் 27 முதல் டெல்டா மாவட்டங்களில் தொடர் போராட்டம்!

இதுமட்டுமின்றி, 28ந் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டத் தலைநகரங்களில், தி.மு.க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இப்போராட்டத்தில் விவசாயிகள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பொது நலஅமைப்புகளை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இப்படி ஒரே நேரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் குதிப்பதால், டெல்டா மாவட்டங்களில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories