தமிழகத்தில் மூன்று ஆண்டுகள் கால தாமதத்திற்குப் பின்னர் தற்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடக்கும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2016ம் ஆண்டு பதவிக்காலம் முடிந்த பின்னர் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் தொடர்ந்து பல்வேறு காரணங்களைச் சொல்லி அ.தி.மு.க அரசு காலம் கடத்தி வந்தது. தற்போது தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில தேர்தல் ஆணையம் செய்துவருகிறது. தமிழக அரசு தரப்பிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு உத்தரவு பறந்திருக்கிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஒருவரிடம் பேசினோம். "அரசு தரப்பிலிருந்து மாவட்டங்களில் நடக்கக்கூடிய அரசு விழாக்களை நவம்பர் 20ம் தேதிக்குள் முடிக்கும்படி கூறப்பட்டது. நவம்பர் இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் என்பதால் அரசு ஊழியர்கள் அதிகம் தேவைப்படுவார்கள் என்பதால் அரையாண்டு விடுமுறையின் போது இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. அதற்குள் அரையாண்டு தேர்வுகளை நடத்திமுடிக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது" என்றார்.
3 வருடங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் காலந்தாழ்த்தப்பட்டு வரும் நிலையில் தேர்தல் ஆணையம் ஒருபுறம் அனைத்து வேலைகளையும் மும்முரமாகச் செய்து வருகிறது. மறுபுறம் அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி நிர்வாகிகளிடமிருந்து விருப்ப மனுக்களைப் பெறுவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். உள்ளாட்சி அமைப்புகளின் இடஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு ஆகியவற்றில் எந்த பிரச்னையும் ஏற்படாமல் இருக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையம் அதிகாரிகள் கருதுகிறார்கள்.
- சி.ஜீவா பாரதி