விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா குயிலாப்பளையம் என்ற ஊரை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மீது 8 கொலை வழக்குகள் உட்பட 27 வழக்குகள் உள்ளன. மணிகண்டனை விழுப்புரம் போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில் மணிகண்டன் சென்னை கொரட்டூரில் பதுங்கி இருப்பதாக விழுப்புரம் போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதயடுத்து மணிகண்டனை பிடிக்க விழுப்புரம் தனிப்படை போலிஸார் சென்னை விரைந்தனர்.
மணிகண்டனை பிடிக்க சென்ற போது தனது கையில் வைத்திருந்த பெரிய பட்டா கத்தியால் ஆரோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரபு என்பவர் தலையில் தாக்கி உள்ளார். மற்றொரு ஆய்வாளரான பிரகாஷ் என்பவர் தனது கையில் இருந்த துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டதில் குற்றவாளியின் மார்பில் குண்டுபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், மணிகண்டனின் கூட்டாளிகள் 3 பேரை போலிஸார் மடக்கிப்பிடித்தனர்.
உயிரிழந்த மணிகண்டன் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காயமடைந்த உதவி ஆய்வாளர் பிரபு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு வருடத்தில் சென்னையில் நடந்த மூன்றாவது என்கவுண்டர் என்பது குறிப்பிடத்தக்கது.