தமிழ்நாடு

இடது கையில் ஸ்டியரிங்.. வலது கையில் வாட்ஸ்-அப் சாட்டிங் : பயணிகள் உயிரோடு விளையாடிய ஓட்டுநர்!

வாட்ஸ்-அப்பில் சாட் செய்துகொண்டே 20 கி.மீ தொலைவுக்கு பேருந்தை இயக்கிய அரசுப் பேருந்து ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இடது கையில் ஸ்டியரிங்.. வலது கையில் வாட்ஸ்-அப் சாட்டிங் : பயணிகள் உயிரோடு விளையாடிய ஓட்டுநர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நேற்று (ஆகஸ்ட் 2) பிற்பகல் புதுக்கோட்டை அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த பேருந்து புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு புறப்பட்டது. பேருந்து புதுக்கோட்டை நகரை கடந்ததும் ஓட்டுநர் போனை எடுத்து வலது கையில் உபயோகித்துக்கொண்டே பேருந்தை இயக்கியுள்ளார்.

அவசரத்துக்கு போனை உபயோகப்படுத்துகிறார் என நினைத்து பயணிகள் பயத்தோடு அமர்ந்திருக்க, சுமார் 20 கிலோமீட்டர் வரை தொடர்ந்து மொபைலை உபயோகித்துக்கொண்டே வந்துள்ளார் அந்த ஓட்டுநர். இடது கையில் ஸ்டியரிங்கை பிடித்துக்கொண்டு வலது கையில் செல்போனில் வாட்ஸ்-அப்பில் சாட் செய்து கொண்டு பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்துள்ளார்.

உயிருக்கு உலை வைக்கும் விதமாக பேருந்தை ஓட்டியதால் பயணிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஓட்டுநரின் அருகே பயணித்த பயணி ஒருவர் ஓட்டுநரின் இந்த சாகச செயலை செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

வாகனம் ஓட்டும்போது போன் உபயோகிக்கக்கூடாது எனும் விதி இருக்கும்போது, வாட்ஸ்-அப்பில் சாட் செய்துகொண்டே கிட்டத்தட்ட 50 பயணிகளுடன் 20 கி.மீ தொலைவுக்கு பேருந்தை இயக்கிய ஓட்டுநரின் செயல் கண்டனத்திற்குள்ளாகி வருகிறது. அரசு போக்குவரத்துக் கழகம் முதலில் தங்கள் ஓட்டுநர்களுக்கு பஸ் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தக்கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓட்டுநரின் செயல் குறித்து தகவலறிந்த புதுக்கோட்டை மண்டல போக்குவரத்துக் கழக பொதுமேலாளர் உத்தரவைத் தொடர்ந்து பட்டுக்கோட்டைக் கிளை மேலாளர் விசாரணை மேற்கொண்டார். செல்போனை பார்த்துக்கொண்டு பேருந்தை இயக்கிய ஓட்டுநர், ஆலங்குடியைச் சேர்ந்த மூக்கையா என்பது தெரியவந்ததையடுத்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories