தமிழ்நாடு

“கை நீட்டிப் பேசினால் கையை உடைப்போம்” : காவல்துறை சொல்ல வரும் மறைமுகச் செய்தி இதுதானா ?

குற்றம் செய்பவரை திருத்துவதற்காக அளிக்கப்பட வேண்டியதே தண்டனைகளே தவிர இது போன்ற காட்டுமிராண்டித்தனமான உடல் சிதைவு செய்வதற்கல்ல.

“கை நீட்டிப் பேசினால் கையை உடைப்போம்” : காவல்துறை சொல்ல வரும் மறைமுகச் செய்தி இதுதானா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும், அதன் பிறகு பல ஆண்டுகளாகவும் தமிழ்நாட்டில் அடிக்கடி குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களின் குதி காலுக்கும் கெண்டைக்காலுக்கும் இடையேயான நரம்பைக் காவல் துறையினர் கத்தரித்து விடுவார்கள். இப்படிச் செய்யப்படுபவர்களால் நடக்கவே முடியாது. ஒரு குற்றம் செய்பவரும் இந்நாட்டின் குடிமகன். அவரைத் திருத்துவதற்காக அளிக்கப்பட வேண்டியதே தண்டனைகளே தவிர இது போன்ற காட்டுமிராண்டித்தனமான உடல் சிதைவு செய்வதற்கல்ல என்ற குரல் எழுந்ததற்குப் பிறகு அது போன்ற செயல்கள் நின்றன.

இந்த இளைஞர் குடி போதையில் காவல் துறையினரிடம் அவர்களைப் பார்த்து "நீ ரிப்போர்ட்டரா" என்று தகராறு செய்யும் காட்சியை வீடியோவில் பார்க்க முடிந்தது. அவருக்குப் போதையில் எதிரே நிற்பவர் யார் என்றே தெரியாத நிலை. அப்படிப்பட்டவர், காவல்துறை விசாரணையின் போது பாத்ரூமில் வழுக்கி விழுந்து மாவுக்கட்டுப் போடும் அளவுக்கு கை முறிகிறது எனில், இது கால் நரம்பைக் கத்தரித்த நிகழ்வையே நினைவுபடுத்துகிறது. பயங்கரவாதிகளை, குழந்தைகளைப் பாலியல் வன்புணர்ச்சி செய்து கொலை செய்பவர்களை முகத்தை மூடி பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் நிகழ்வுகளையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியுள்ளது.

இரு சக்கர வாகனத்தில் பின் அமர்ந்து வருபவர்கள் தலைக் கவசம் அணியவில்லை எனில் வாகனச் சாவியைப் பிடுங்கி, லைசென்ஸை பிடுங்கி ஒரு படி மேலே சென்று “ஏடிஎம் கார்டை கொடுடா”, அல்லது “கொடுய்யா” என்று அதட்டி, உருட்டி, “பின் நம்பர் சொல்றா” என மிரட்டும் காவல்துறையின் போக்குவரத்துக் காவல் அலுவலர்கள் சிலரைப் பார்க்கும் போதும், குடித்தவர்களை இவர்கள் நடத்தும் விதங்களைப் பார்க்கும் போதும் நமக்குத் தோன்றுவது இதுதான். "ஒரு பக்கம் குடிக்க வைத்து, ஊத்திக் கொடுத்து விற்பனைக்கு டார்கெட் வைத்து கல்லாக் கட்டிக் கொண்டே, அந்தப் பக்கம் டிரங்க் அண்ட் டிரைவிங்கை பிடிக்கச் சொல்பவர்கள், குடி நோயாளிகளாக்குபவர்கள் “எப்போது பாத்ரூமில் வழுக்கி விழுவார்கள்?”

மற்றபடி, இதுபோன்ற இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றம் மூலம் உரிய தண்டனை பெற்றுத் தருவது மட்டுமே காவல் துறையினரின் பணி என்கிறது சட்டம். பிறகு நீதிமன்றம் எதற்கு ? இழுத்து மூடிவிடலாமே? உடனே எல்லாக் குற்றங்களிலும் இப்படியேவா என கொடி பிடித்து யாரும் வரவேண்டாம். இங்கே நான் கேள்விக்குறியதாக ஆக்குவது காவல்துறை அதிகாரிகள் சிலரின் Attitude. காரணம், நாளை நம்மில் யார் வேண்டுமானாலும் பாத்ரூமில் வழுக்கி விழுவோம்.

- விஷ்வா விஸ்வநாத், ஊடகவியலாளர்

Related Stories

Related Stories