தமிழகத்தில் இயங்கிவரும் அனைத்து மருத்துவம் சார்ந்த நிறுவனங்களும், தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் சட்டம் 2018-ன் கீழ் மருத்துவமனை குறித்து கட்டாயம் பதிவு செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதன் படி மார்ச் 31ம் தேதிக்குள் பதிவு செய்திருக்க வேண்டும் என்று கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் தற்பொழுது முடிந்த நிலையில் பதிவு செய்யாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க போவதாக மருத்துவச் சேவைகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
தற்போது வரை 20 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன. இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்ய பல்வேறு விதிமுறைகள் உள்ளன. அதன்படி, போதிய இட வசதி, சுகாதாரமான குடிநீர் வசதி, கழிப்பிடம், ஒவ்வொரு பிரிவுக்கும் தேவையான ஊழியர்கள் இருத்தல் வேண்டும். கிராமப்புறங்களில் இருக்கும் ஆய்வகங்கள் 500 சதுர அடி பரப்பிலும், நகர்ப் புறங்களில் இருக்கும் ஆய்வகங்கள் 700 முதல் ஆயிரத்து 500 சதுர அடி பரப்பிலும் இருப்பது அவசியம்.
சென்னையில், மருத்துவ சேவைகள் இயக்குனரகத்தின் 3 குழுக்கள், இது தொடர்பான சோதனையில் ஈடுபட்டுள்ளன. பதிவு செய்யாத மருத்துவமனைகள், கிளினிக்குகள், நர்சிங் ஹோம்கள் ஆகியவை இழுத்து மூடப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர். பதிவு செய்யும் மருத்துவமனைக்கு 5 ஆண்டுகளுக்கு உரிமம் கிடைக்கும். என தெரிவித்துள்ளனர்.