நியூஸிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒரு நாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா (101 ரன்கள்), சுப்மன் கில் (112 ரன்கள்) ஆகியோர் சதம் அடித்து அசத்தினர். இந்த ஒருநாள் சதம் ரோகித் சர்மா விளாசிய 30-வது சதமாக பதிவாகியது.
அவர் இந்த சதத்தை எடுத்ததும் கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு அடித்த முதல் சதம் இதுவாகும் என ஒளிபரப்பு நிறுவனம் செய்தி வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் இது குறித்த தகவல்களை பகிர்ந்தனர். இதனால் ரோஹித் சர்மா நெடுநாள் ஒருநாள் போட்டிகளில் சதமடிக்கவில்லை என விமர்சனம் வெளியானது.
அந்த போட்டி முடிந்ததுமே இது குறித்து ரோஹித் சர்மா விளக்கமளித்தார். அவர் பேசியதாவது " நான் கடந்த 3 ஆண்டுகளில் மொத்தமே 12 ஒருநாள் போட்டியில்தான் விளையாடியுள்ளேன்.நீங்கள் 3 ஆண்டுகள் என்று பெரிதாக சொல்வது மிகவும் அதிக காலம் போல் தோன்றுகிறது. ஒளிபரப்பு நிறுவனம் புள்ளி விவரங்களை சரியான பார்வையில் கொடுக்க வேண்டும்" என்று விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாக இந்திய வீரர் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "3 வருடங்களுக்குப் பின், 4 வருடங்களுக்குப் பின் என நீங்கள் புள்ளி விபரங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். கிரிக்கெட் வல்லுநர்களுக்கு யதார்த்தம் என்னவென்பது தெரியும். ஆனால், இதை கேட்கும் சாமானிய ரசிகர்கள் என்ன நினைப்பார்கள்? 'ஆம், அவர் ரன் அடிக்கவில்லை; அவரை நீக்குங்கள்' என்றுதான் அவர்கள் நினைப்பார்கள்.கடந்த 10-15 ஆண்டுகளில் லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் செயல்திறனைக் கேள்விக்குட்படுத்த எதுவுமே இல்லை" என்று கூறியுள்ளார்.