கடந்த ஐ.பி.எல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக களமிறங்கிய தினேஷ் கார்த்திக் தனி ஒருவனாக பல போட்டிகளில் அந்த அணிக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளார். மேலும் அந்த தொடரில் சிறந்த பினிஷெராக செயல்பட்டு பலரது கவனத்தையும் ஈர்த்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.
அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட தினேஷ் கார்த்திக் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக ஆடி வருகிறார். இதனால் அவரை உலக கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் என பல முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர்.
அதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3-வது போட்டியில் தினேஷ் கார்த்திக் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது தினேஷ் கார்த்திக் குறித்துப் பேசிய முன்னாள் இந்திய வீரரும் பாஜக எம்.பியுமான கம்பீர், "டி20 உலகக்கோப்பை ரிஷப் பண்ட், தீபக் ஹூடா, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் போன்றோர் இருப்பார்கள் என்பதால், தினேஷ் கார்த்திக்கு அணியில் இடம் கொடுப்பதில் எந்த அர்த்தமும் கிடையாது.
மேலும், ரோஹித், விராட் கோலி பார்முக்கு திரும்பிவிட்டால், தினேஷ் கார்த்திக்கிற்கு இடமே இருக்காது. எனவே தினேஷ் கார்த்திக் இடத்தில் சில ஓவர்களை வீசும் பௌலரை சேர்க்க வேண்டும். தினேஷ் கார்த்திக் இனியும் தனது திறமையை நிரூபிக்க முடியாது. ஐ.பி.எல் வேறு, இந்திய அணி வேறு" என்று கூறியிருந்தார்.
இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 4-வது போட்டியில் 27 பந்துகளில் 55 ரன்களை குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக தினேஷ் கார்த்திக் திகழ்ந்ததோடு கம்பீருக்கு தனது ஆட்டத்தால் சரியான பதிலடியும் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், கம்பீருக்கு இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார் . இதுகுறித்து பேசிய அவர், "தினேஷ் கார்த்திகால் ஐ.பி.எல்லை தவிர்த்து, இந்திய அணிக்காக சிறப்பாக விளையாட முடியாது. அவரை நீக்கிவிடுவதுதான் நல்லது என பலர் பேசியதை நான் கேட்டிருக்கிறேன்.
அவரால் முடியாது என நீங்கள் எப்படி சொல்கிறீர்கள். அவர் தகுதியான வீரர் என்பதை நிரூபித்தும் காட்டிவிட்டார். இனியும் அவர் என்ன செய்ய வேண்டும்? அதனையும் நீங்களே கூறிவிடுங்கள். டி20 உலகக்கோப்பை அணிக்கும் தினேஷ் கார்த்திக் நிச்சயம் தேவை” எனக் கூறியுள்ளார்.