
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் பகுதியை அடுத்துள்ளது இச்சாபுரம் என்ற இடம். இங்கு 19 வயதான வாணி என்ற இளம்பெண் வசித்து வருகிறார். சிறு வயதிலேயே தனது பெற்றோரை இழந்த வாணியை, அவரது தாய்வழி அத்தையான சந்தியா என்பவர் வளர்த்து வந்துள்ளார்.
இந்த சூழலில் வாணிக்கும், கர்நாடகாவை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருமணமாகியுள்ளது. திருமணத்திற்கு பிறகு தனது சொந்த ஊருக்கு வாணியை, அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் இரயிலில் அழைத்துச் சென்றுள்ளனர். அந்த சமயத்தில் விஜயநகரம் இரயில் நிலையத்தில், இரயில் சற்று நேரம் நின்றிருந்த நேரத்தில், வாணி கழிவறைக்கு செல்வதாக கூறி அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இரயில் புறப்பட்டு சில நிமிடங்கள் ஆன நிலையிலும், வாணி வராததால் அவரது கணவர் அவரை தேடியுள்ளார். மேலும் அங்கிருந்த நகை மற்றும் 1.5 லட்சம் பணத்தையும் காணவில்லை. அதோடு வாணி எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், அவரது அத்தையான சந்தியாவை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அவரும் போனை எடுக்கவில்லை என்பதால் நேரடியாக குடும்பத்தினர் அங்கு சென்றுள்ளனர்.
அங்கே அத்தை சந்தியாவுடன் வாணி இருப்பதை கண்டு மாப்பிள்ளை வீட்டார் அதிர்ச்சியடைந்த நிலையில், வாணியிடம் விசாரித்துள்ளனர். ஆனால் அவர், அந்த நபருடன் செல்ல விருப்பமில்லை என்று கூறியதாக கூறப்படுகிறது. எனவே பணத்தையும் நகையையும் திரும்ப தருமாறு மாப்பிள்ளை வீட்டார் கேட்டுள்ளனர்.

ஆனால் பணத்தை காலையில் தருவதாக கூறிய வாணி மற்றும் அவரது அத்தை சந்தியா, மாப்பிள்ளை குடும்பத்தினரை அங்கேயே இருக்குமாறு கூறியுள்ளனர். இதனை நம்பிய குடும்பத்தினரும் அங்கே தங்கிய நிலையில், மறுநாள் காலை வாணி மற்றும் அவரது அத்தை சந்தியாவை காணவில்லை. இரவோடு இரவாக அவர்கள் ஓடிப்போனதை அறிந்த குடும்பத்தினர், பின்னரே இதுகுறித்து இச்சாபுரம் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது 19 வயதான வாணி, தனது அத்தை சந்தியாவின் தூண்டுதலின்பேரில் இதுவரை 8 பேரை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து நகை, பணம் உள்ளிட்டவற்றை ஏமாற்றி சென்றதையும், அவர் மீது பல்வேறு பகுதிகளில் புகார்கள் இருப்பதையும் போலீசார் கண்டறிந்தனர்.

குறிப்பாக திருமணம் ஆகாத இளைஞரை குறிவைத்து, அவர்களை திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து, அவர்களிடமிருந்து எதிர் வரதட்சணை வாங்கி, திருமணத்திற்குத் தயாராகி, பின்னர் திருமணம் செய்து கொண்டு நகை, பணத்துடன் தலைமறைவாகிவிடுவதே வாணி வாடிக்கையாக வைத்துள்ளது தெரியவந்தது.
இதுவரை கர்நாடகா, கேரளா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இதுவரை திருமணம் ஆகாத 8 இளைஞர்களை இவர்கள் ஏமாற்றியுள்ளதை போலீசார் கண்டறிந்தனர். இதைதொடர்ந்து தற்போது பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் வாணி மற்றும் அவரது அத்தை சந்தியா ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.






