மும்பை மற்றும் கேரளா இடையேயான சையத் முஷ்தாக் அலி டிராஃபி போட்டியில் 37 பந்துகளில் சதமடித்து கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்திருக்கிறார் கேரளாவின் இளம் வீரரான Mohammed Azharuddeen.
மும்பை அணி நிர்ணயித்த 197 ரன்கள் இலக்கை அசாருதினின் அதிரடியால் சஞ்சு சாம்சன் தலைமையிலான கேரள அணி 15.5 ஓவர்களிலே வெற்றிகரமாக சேஸ் செய்தது. மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.
அந்த அணியின் சார்பில் ஓப்பனர்களான ஜெய்ஸ்வால் 40 ரன்களையும் ஆதித்யா தாரே 42 ரன்களையும் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். நம்பர் 3-ல் வந்த சூரியகுமார் யாதவ் 19 பந்துகளில் 38 ரன்கள் அடிக்க மும்பை அணியின் ஸ்கோர் வேகமாக உயர ஆரம்பித்தது.
இறுதியில் லேட், சர்ஃப்ராஸ் கான், சிவம் துபே ஆகியோர் தங்கள் பங்குக்கு அதிரடி கேமியோக்கள் ஆட மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 196 ரன்களை எடுத்தது. 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பெரிய இலக்குடன் கேரள அணி களமிறங்கியது.
கேரள அணியிலும் நல்ல பேட்ஸ்மேன்கள் இருந்ததால் ஆட்டம் கடைசி வரை விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த அணியின் ஓப்பனராகக் களமிறங்கிய Mohammed Azharuddeen பவர்பிளே முடிவதற்குள்ளாகவே ஆட்டத்தை மும்பை அணியிடமிருந்து தட்டிப்பறித்துவிட்டார்.
குல்கர்னி வீசிய முதல் ஓவரில், தான் சந்தித்த முதல் பந்தையே பவுண்டரி அடித்து தொடங்கிய அசாருதின், விறுவிறுவென அடுத்த கியருக்கு ஆட்டத்தை மாற்றி அடுத்தடுத்த ஓவர்களில் இன்னும் வெளுத்தெடுக்க தொடங்கினார். 20, 16, 10, 13, 23 என பவர்ப்ளேயின் அடுத்த 5 ஓவர்களுமே பட்டாசாக ரன்களை சேர்த்தார். எல்லாமே க்ளியர் ஹிட்டாக, ஆர்த்தோடாக்ஸ் ஷாட்டாக வந்தவை.
கபில்தேவின் நடராஜ் ஷாட்டையெல்லாம் அடித்து அட்டகாசப்படுத்தினார். துஷார் தேஷ்பாண்டே வீசிய இரண்டாவது ஓவரிலேயே தன் அத்தனை ஸ்கில்களையும் வெளிப்படுத்தினார் அசாருதின். ஃபுல் லென்த்தில் வீசப்பட்ட பந்தை நின்ற இடத்திலிருந்து அசால்டாக மிட் ஆன் திசையில் சிக்ஸர் அடித்தார். ஷார்ட் பிட்சாக உடலை நோக்கி வந்த பந்தை, தன் அட்டகாசமான டைமிங் மூலம் ஃபைன் லெக் திசையில் பௌண்டரி ஆக்கினார்.
நான்காவது ஸ்டம்ப் லைனில் சென்ற இன்னொரு பந்தை, அற்புதமான கவர் டிரைவ் மூகம் பௌண்டரிக்கு அனுப்பினார். ஒவ்வொரு ஷாட்டிலும் நல்ல டைமிங்கும் பவரும் இருந்தது. இன்னொரு எண்ட்டில் நின்ற அனுபவ வீரரான உத்தப்பாவும் அவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து ஆடவிட்டார். 20 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார் அவர்.
வேகப்பந்துவீச்சாளர்களை நின்ற இடத்தில் இருந்து டீல் செய்தார் என்றால், ஸ்பின்னர்களை இறங்கி வந்து அட்டாக் செய்தார். அவர் கிரீஸிலிருந்து வெளியேறினாலே பந்து பௌண்டரிக்கும் சிக்ஸருக்கும் பறப்பது உறுதி என்றானது. அவரது வெறித்தன ஆட்டம் நிற்காமல் தொடர, 6.5 ஓவர்களிலேயே 100 ரன்களைக் கடந்தது கேரளா.
குல்கர்னி, துஷார் தேஷ்பாண்டே, முலானி, ஹனகவாடி என அனைவரின் பந்துகளையும் சிதறடித்த அசாருதின் 37 பந்துகளில் சதமடித்தார். உத்தப்பா அவுட் ஆன பிறகு, சாம்சனுடன் Mohammed Azharuddeen கூட்டணி அமைக்க, இருவரும் சேர்ந்து மும்பையின் அட்டாக்கை சின்னாபின்னமாக்கினர். இறுதியில், இவர்களின் அதிரடியில் கேரள அணி 15.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது. அசாருதின் 54 பந்துகளில் 137 ரன்களை எடுத்தார்.
இதில் 11 பவுண்டரிக்களும் 9 சிக்சர்களும் அடக்கம். அதிரடியாக வெடித்து சிதறியிருந்தாலும் இவரின் ப்ளேயிங் ஸ்டைல் ரொம்பவே க்ளாஸாக இருந்தது. 54 பந்துகளை எதிர்கொண்டவர் 6 டாட்கள் தான் ஆடியிருக்கிறார். அதிகமாக ரன்களை பவுண்டரி மூலம் அடித்தாலும். ஸ்ட்ரைக்கை தொடர்ந்து ரொட்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதையும் புரிந்து வைத்திருக்கிறார்.
விரைவில் ஐ.பி.எல் ஏலம் நடைபெற உள்ள நிலையில் அதிரடியாக ஓப்பனிங் ஆடும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான முகம்மது அசாருதினுக்கு இந்த ஏலத்தில் பெரிய டிமாண்ட் இருக்கும் என எதிர்பார்க்கலாம். கேரள அணிக்கான வின்னிங் ரன்னை அசாருதின் சிக்சர் அடிக்கும் போது நான் ஸ்ட்ரைக்கரில் சச்சின் (பேபி) நின்று கொண்டிருந்தார். What a Coincidence!