
திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த காவல் பாதுகாப்பை குறைத்துள்ளது தவெக அரசு. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
குறிப்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் காண தொண்டர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் தினமும் வருகை தரும் நிலையில் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அரசே பாதுகாப்பை விலக்கிக் கொண்டுள்ளது பல்வேறு விமர்சனங்களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
இதுகுறித்து, SDPI கட்சியின் தமிழ்நாடு தலைவர் நெல்லை முபாரக், திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை குறைத்திருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது.

ஒரு மாநிலத்தின் மிக முக்கிய அரசியல் தலைவராகவும், பிரதான எதிர்க்கட்சித் தலைவராகவும் மக்கள் பணியில் தொடர்ந்து தீவிரமாக இயங்கி வருபவர் உயர்திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள். பொதுவெளியில் தினமும் ஆயிரக்கணக்கான மக்களைச் சந்திக்கும் இத்தகைய மக்கள் தலைவர்களின் பாதுகாப்பு என்பது சமரசத்திற்கு அப்பாற்பட்டது.
சமகால அரசியல் சூழலில் தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது இன்றியமையாத தேவையாக உள்ள நிலையில், திடீரென பாதுகாப்பைக் குறைத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதோ என்ற நியாயமான சந்தேகத்தை எழச் செய்கிறது.
மக்கள் தலைவர்களின் பாதுகாப்பில் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளோ, உள்நோக்கங்களோ துளியும் தலைதூக்கக் கூடாது. மாற்றுக் கருத்துகள், அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பாற்பட்டு, உயர்திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் மக்கள் தொடர்பையும் முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு, அவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த அதே முழுமையான 'Z+' பாதுகாப்பைத் தாமதமின்றி மீண்டும் வழங்கிட வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
இந்த பாதுகாப்பு குறைப்பு பற்றி மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவரும் எம்.எல்.ஏ-வுமான தமிமுன் அன்சாரி, முன்னாள் முதல்வரும், திமுகவின் தலைவருமான அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கொடுத்து வந்த உயர் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு முதலமைச்சர் விஜய் குறைத்தது ஆச்சரியம் அளிக்கிறது.
இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது காழ்ப்புணர்ச்சி அரசியலின் வெளிப்பாடாகவே கருதப்படும் என கண்டனம் தெரிவித்துள்ளார்.






