இன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
அவரின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையும் அவர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் , "சென்னை பத்திரிகையாளர் சந்திப்பில் ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்ட கருத்துகள், தமிழக மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தின் எதிர்காலத்தை நேரடியாக பாதிக்கும் வரலாற்றில் இல்லாத அநீதி ஆகும்.
“தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி வழங்கப்படுவதற்கு 2020 தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று அவர் ஆணவத்துடன் கூறியதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாக கண்டிக்கின்றேன்.கல்வி என்பது அரசியலோ அல்லது வணிகமோ அல்ல; அது மக்கள் அடிப்படை உரிமை.
ஒன்றிய அரசு, கல்வியை அரசியல் கருவியாக மாற்றி, தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை அச்சுறுத்தி, அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள், அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவரையும் தவிர்க்க முடியாத பாதிப்புகளுக்கு உட்படுத்துகிறது.
இது அநீதியும், அதிகார வன்முறையும் கலந்த, வரலாற்றில் மிகவும் கொடிய செயல்.எந்தவொரு நிபத்தனையையும் விதிக்காமல் உடனடியாக தமிழ்நாட்டின் கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்திகிறேன்"என்று கூறப்பட்டுள்ளது.