புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த நான்காண்டு சாதனை மலரை அமைச்சர் எஸ்.ரகுபதி, அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் வெளியிட்டனர்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "எடப்பாடி பழனிச்சாமி வேதனை மலர்தான் வெளியிட முடியும். இது போன்ற சாதனை மலர் வெளியிட முடியாது. நாங்கள் கொண்டு வந்த அத்தனை திட்டமும் புதிய திட்டம். இதற்கு ஒன்றுக்காவது அவர் பிள்ளையார் சுழி போட்டிருந்தால் கூட உரிமை கொண்டாடலாம்.
நாங்கள் கொண்டு வந்த அனைத்து திட்டமும் புதிய திட்டங்கள். முதலமைச்சர் மு க ஸ்டாலின் சிந்தனையில் உதித்த திட்டங்கள். இதற்கு அவர் உரிமை கொண்டாட முடியாத காரணத்தினால் எங்கள் ஆட்சியில் கொண்டு வந்த திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டார்கள் என்று கூறுகிறாரே தவிர நாங்கள் கொண்டு வந்த திட்டங்களுக்கு இணையாக எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. அதற்கான ஆயத்தப் பணிகளை கூட அவர் செய்யவில்லை.
கூட்டணியில் எந்த கணக்கை போட்டால் வெற்றி பெற முடியும் என்ற கணக்குத் தெரிந்தவர் திமுக தலைவர் மு.க ஸ்டாலின். அதனால் அவர் போடுகின்ற கணக்கு தப்புக்கணக்காக இருக்காது. வெற்றிக் கணக்காக இருக்கும். ஒரு அரசியல் தலைவரின் உடல் நலத்தை பற்றி அபாண்டமாக குற்றம் சாட்டு சொல்வது போன்ற மட்ட ரகமான செயல் உலகத்தில் கிடையாது. அதை எடப்பாடி பழனிச்சாமி செய்து கொண்டிருக்கிறார். தோல்வி பயத்தில் அவர் தன்னை மறந்து கத்துகிறார் உளறுகிறார்.
தமிழ்நாட்டின் வாக்காளர்களுடைய மனநிலை வேறு, பீகார் மாநிலத்தின் வாக்காளர்களின் மனநிலை வேறு. வெளிமாநிலத்தவர் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் விவகாரத்தில், தேர்தல் ஆணையத்தில் தகுந்த முறையீடுகளை நாங்கள் எடுத்து வைப்போம். வெளிமாநிலத்தில் இருந்து வாக்காளர்களை இறக்குமதி செய்வதை நிச்சயமாக தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது"என்று கூறியுள்ளார்.