பஹல்காம் தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக தனியார் ஆங்கில இணையதளத்திற்கு பேட்டியளித்த ப.சிதம்பரம் ஒன்றிய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து, போதுமான தகவல்களை ஒன்றிய அரசு வழங்கவில்லை என்றும் அவற்றை வெளியிடுவதற்கு ஒன்றிய அரசு விரும்பவில்லை என்றும் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், பயங்கரவாதிகள் எங்கே, பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டார்களா அல்லது அடையாளம் காணப்பட்டார்களா என அடுக்கடுக்காக ஒன்றிய அரசுக்கு ப.சிதம்பரம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களில் குறைபாடுகள் உள்ளதாக குற்றம்சாட்டியுள்ள முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமரோ பாதுகாப்புத்துறை அமைச்சரோ வெளியுறவுத்துறை அமைச்சரோ ஏன் விரிவான அறிக்கை வெளியிடவில்லை என்று வினவியுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான உண்மையை ஒன்றிய அரசு மறைக்கிறது என்று தாம் கருதுவதாகவும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது ஒன்றிய அரசின் ராஜதந்திர உத்திகளில் தவறுகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதல் குறித்து இத்தனை வாரங்களாக தேசிய புலனாய்வு முகமை நடத்திய விசாரணையில் தெரியவந்த தகவல்களை ஒன்றிய அரசு வெளியிட விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்துதான் வந்தார்கள் என, ஒன்றிய அரசு கருதுவதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது ஏற்பட்ட இழப்புகளை ஒன்றிய அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றும் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.