ஜனதா கட்சி, காங்கிரஸ் என தனது அரசியல் பயணத்தை தொடங்கிய ஜெகதீப் தன்கர் கடந்த 2003-ம் ஆண்டில் பாஜகவில் இணைந்தார். அங்கு பல்வேறு பதவிகளை வகித்த அவர். கடந்த 2019-ம் ஆண்டு மேற்குவங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
அப்போது மாநில அரசுடன் பல்வேறு முரண்பாடுகளை சந்தித்த அவர் பின்னர் குடியரசுத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அதோடு மாநிலங்களவை சபாநாயகராகவும் அவர் திகழ்ந்து வரும் நிலையில், மாநிலங்களவையில் தனது பதவியை மறந்து பாஜக அரசின் பிரதிநிதி போல அவர் செயல்பட்டது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே இரவு உடல்நிலையை காரணம் காட்டி குடியரசுத் துணைத் தலைவர் பதவியில் இருந்து பாதியிலேயே ஓய்வு பெறுவதாக ஜெகதீப் தன்கர் அறிவித்துள்ளார். இதன் காரணமாக அடுத்த குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தொடங்கிவிட்டதாக நேற்று முன்தினம் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
இதனால் விரைவில் தேர்தல் அட்டவணை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துணை குடியரசு தேர்தல் விதிமுறைப்படி தேர்தல் அறிவிப்பு வெளியிட்டால் வேட்பு மனுதாக்கல் செய்ய 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட வேண்டும். அதற்கு பிறகு 14 நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அவகாசம் வழங்கப்பட வேண்டும்.
நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஆகஸ்ட் 21 ஆம் தேதி முடிவடைய உள்ளது. இந்த நிலையில் தேர்தல் நடைமுறை காரணமாக தற்போதைய கூட்டத் தொடர் முடியும் முன்னதாக துணை குடியரசு தேர்தல் நடைபெற வாய்பில்லை என்று கூறப்படுகிறது. துணை குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் நிலையில், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் 782 பேர் வாக்களித்து குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.