பீகார் சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் வேளையில், ஆளும் பா.ஜ.க கூட்டணிக்கு எதிராக மக்கள் திரண்டு வருவதால், வாக்குகளை நீக்கி ஆட்சியைக் கைப்பற்ற திட்டமிட்டுள்ளது பா.ஜ.க அரசு.
இதனை பா.ஜ.க நேரடியாக செய்யாமல், வாக்காளர் திருத்தப் பட்டியல் (SIR) என்கிற பெயரில், தேர்தல் ஆணையத்தைக் கொண்டு செயல்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) என்பது சத்தமே இல்லாமல் பின்தங்கிய மற்றும் தங்களுக்கு எதிரான பிரிவினரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி, தேர்தலில் பா.ஜ.க.வுக்கு சாதகமான சூழலை உருவாக்கும் செயலாகும். இது சீர்திருத்தம் அல்ல; தேர்தல் முடிவுகளைத் திட்டமிட்டபடி வடிவமைக்கும் தில்லுமுல்லு நடவடிக்கை!
பீகார் மாநிலத்தில் நடந்ததே அனைத்தையும் வெட்டவெளிச்சமாக்கிவிட்டது. முன்பு தங்களுக்கு வாக்களித்த அதே மக்களே கூட இம்முறை நம்மை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் என்பதை டெல்லி அணி நன்கு உணர்ந்துள்ளது. அதனால்தான், அவர்கள் வாக்களிக்கவே கூடாது எனத் தடுக்கப் பார்க்கிறது.
எங்களைத் தோற்கடிக்க முடியாது என்ற சூழல் எழுந்தால் எங்களை வாக்காளர் பட்டியலில் இருந்தே நீக்கப் பார்க்கிறீரகள். நெருப்புடன் விளையாடாதீர்கள். மக்களாட்சிக்கு எந்த வடிவில் அச்சுறுத்தல் நேர்ந்தாலும் அதனை உறுதியாக நின்று எதிர்ப்போம்.
முழு ஆற்றலுடன் தமிழ்நாடு தனது குரலை உரக்க எழுப்பும். இந்த அநீதிக்கு எதிராக ஜனநாயகரீதியான அத்தனை ஆயுதங்களையும் நாங்கள் அறவழியில் பயன்படுத்துவோம்.
அரசியலமைப்புச் சட்டத்தின்பால் நம்பிக்கை கொண்டுள்ள குடிமக்கள் அனைவருக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால்: S.I.R. என்பது ஒரு மாநிலத்தோடு தொடர்புடையது மட்டுமல்ல, நமது குடியரசின் அடித்தளம் தொடர்பானது. மக்களாட்சி மக்களுக்கே உரியது. அதனை எவரும் களவாட அனுமதிக்க மாட்டோம்!” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.