இந்தியாவின் முதன்மை மாநிலம் என்ற பெயரை தமிழ்நாடு பெற்றிருக்க, அதன் அசைக்கமுடியாத முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார்.
அவரின் தலைமையிலான திராவிட மாடல் அரசு கருத்தியல் சார்ந்த அரசியலை முன்வைத்து, தனித்துவமான தமிழ்நாட்டை உருவாக்கி வருகிறது. குறிப்பாக எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் கருத்து, இந்தியாவில் பல மூலைகளில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் ஆங்கில வார இதழான THE WEEK-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில் அளித்த விடைகள் பின்வருமாறு,
மாநில உரிமையையும், மொழி உரிமையையும் நிலைநாட்ட தனது உரிமை குரலை உரக்க எடுத்துரைப்பது, தமிழ்நாட்டின் பொதுவான நிலைப்பாடு. ஆனால், அதற்கு முற்றிலும் எதிரான கருத்துகளை திணித்து வருகிறது பா.ஜ.க. இவ்வேளையில், மாநிலத்தின் உரிமையை நிலைநாட்ட, தமிழ்நாட்டின் பல்வேறு கட்சிகளும், மக்களும் உறுதுணையாக இருப்பது பெருமைக்குரியதாய் அமைந்துள்ளது.
இந்தியாவிற்கே முன்னோடியாக விளங்கும் திராவிட மாடல் அரசின் நலத்திட்ட உதவிகளை விமர்சிக்கும் சிலருக்கு, மக்களின் நலனில் அக்கரை இல்லை என்றே பொருள். இவை, வெறும் நலத்திட்ட உதவிகள் மட்டுமல்ல, சமூக வளர்ச்சிக்கான முன்னெடுப்புகள். அதனால்தான், நம் திட்டங்களை தேசிய அளவில் பின்பற்றுகிறார்கள்.
பெண்கள் சுதந்திரமாக செயல்படுவதையும், தனித்துவமிக்கவர்களாக விளங்குவதையும் உறுதிப்படுத்துவதே திராவிட மாடல். அதற்காகதான், பெண் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். பெண்கள் கல்வி கற்றால் சமூகம் வளர்ச்சியடையும் என்ற கருத்தை முன்னிறுத்தி ஆட்சி செய்கிறோம்.
முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான தி.மு.க, ஊடக சுதந்திரத்தையும், பேச்சு உரிமையையும் ஆதரித்து செயல்பட்டது. உரிமை பறிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்தது. அவ்வகையில், தற்போது மாநில மற்றும் மொழி உரிமைகளை நிலைநாட்ட செயல்பட்டு வருகிறோம். உரிமைகளை நிலைநாட்டும் பயணத்தை தி.மு.க, அப்போது போல இப்போதும் முன்னெடுத்து செல்கிறது.
தி.மு.க.வின் கருத்தியலுக்கு ஒத்த சிந்தனையுடைவர் சகோதரர் ராகுல் காந்தி. இந்திய அளவில் தெளிவான அரசியல் புரிதல் உடையவர். இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை மதித்து செயல்படுபவர். அதனால், எங்களுக்கு இடையிலான உறவு கூடிக்கொண்டே இருக்கிறது. அவர், இந்தியாவின் தலைசிறந்த, நம்பகத்தன்மையுடைய தலைவர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.