காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி காலமானார். இதைத்தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக சட்டப்பேரவைச் செயலகம் அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8 ஆம் தேதியும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.இந்த தேர்தலில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். எதிர்க்கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்த நிலையில், சில சிறிய கட்சிகள் மட்டுமே இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து பிப்.5 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பின்னர் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டன. இதில் ஆரம்பத்தில் இருந்தே முன்னிலையில் இருந்த திமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட 45 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்துள்ளனர்.
திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 1,14,439 வாக்குகள் பெற்று வெற்றிபெற்ற நிலையில், அவருக்கு அடுத்த வேட்பாளரை விட 90 629 வாக்குகள் அதிகம் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.