நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அதில் கலந்துகொண்ட விசிக தலைவரும் எம்.பியுமான திருமாவளவன் சென்னை திரும்பினார். தொடர்ந்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா காங்கிரஸ் கட்சி அம்பேத்கரை அவமதித்தது என அடுக்கடுக்காக விமர்சித்தார். அப்போது காங்கிரஸ் கட்சி விமர்சிக்கிறேன் என்ற பெயரில் புரட்சியாளர் அம்பேத்கரை அவமதித்து பேசியதால்தான் இந்த கொதி நிலைக்கு காரணம். மேலும் அவர் கடவுளுடன் ஒப்பீடு செய்து பேசியது பிரச்சினையை ஏற்படுத்தி, அது நாடாளுமன்றம் மட்டுமின்றி ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்திய கூட்டணி கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வாயிலில் ஜனநாயக பூர்வமாக எங்கள் எதிர்ப்பை பதிவு செய்தோம். நாடாளுமன்ற வாயிலில் 100க்கும் மேற்பட்ட பாஜக எம்.பிக்கள் எதிர்க்கட்சி எம்.பிக்களை தடுத்து உள்ளே செல்ல விடாமல் தடுத்ததுதான் பிரச்சனைக்கு வித்திட்டது. அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக பாஜக எம்பிக்கு காயம் ஏற்பட்டது.
பாஜக எதிர்க்கட்சிகளின் ஜனநாயக பூர்வ போராட்டத்தை அனுமதிக்காமல், வாசலில் வழி மறைத்து நின்று வன்முறைக்கு வித்திட்டார்கள் என்பது உண்மை. ராகுல் காந்தி மீது பொய் வழக்கு போட்டது கண்டனத்துக்குரியது. அமித்ஷா பேச்சு திரிக்கப்பட்டது என்று சொல்வது உண்மையல்ல. அவை நடவடிக்கை முழுவதும் ஒளிபரப்பப்பட்டுள்ளது, அது புனையப்பட்டது அல்ல. 100% அவர் பேசிய பேச்சு தான் பரப்பப்பட்டுள்ளது. அவர் மீது யாரும் அவதூறு பரப்பவில்லை. அமித்ஷாவின் பேச்சு அவரது ஆழ் மனதில் உள்ள அம்பேத்கரின் வெறுப்பைத்தான் வெளிப்படுத்தி உள்ளது
தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என் ரவி எப்போதும் சர்ச்சைகளை உருவாக்கக் கூடியவர். அதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.தமிழ்நாடு அரசுக்கு தலைவலி கொடுப்பதாக எண்ணி ஆட்சி நிர்வாகத்திற்கு முட்டுக்கட்டை போட்டு நெருக்கடிகளை தருகிறார். நிர்வாக சிக்கல்களை ஏற்படுத்துகிறார். அவரை இந்திய ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும்" என்று கூறியுள்ளார்.