சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயலாமல் போனதற்கு எந்த அழுத்தமும் காரணமில்லை. அது சுதந்திரமாக நான் எடுத்த முடிவு.
அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டிருந்தால் இதை வைத்து அரசியல் செய்யும் சிலர் இதை திசை திருப்புவதற்கும், திரிபுவாதம் செய்வதற்கும் வாய்ப்புள்ளது. யாருக்கும் பணிந்து முடிவெடுக்க இயலாமல் தேங்கி நிற்கிற நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லை.
முறையான அறிவிப்பு வெளியாகும் முன்னரே விழாவில் நான் கலந்துகொள்வதாக ஒரு நாளிதழ் தலைப்புச் செய்தியாக்கிவிட்டது. அப்போதுதான் முதல்முறையாக இந்த சர்ச்சை உருவானது. அந்த நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்திற்கு எனக்கு உடன்பாடு இல்லை.
அந்தக் கருத்தை நானும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் மறுக்கிறது. இது குறித்து ஆதவ் அர்ஜுனாவிடம் உயர்நிலைக் குழுவின் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது எனக்கு எந்த நெருடலும் இல்லை. கட்சியின் நலன் மற்றும் கூட்டணி நலன் கருதி சனாதன சக்திகளின் சூழ்ச்சியில் சிக்காமல் இருக்க உறுதிப்பாட்டுடன் எடுக்கப்பட்ட முடிவு.
வேங்கைவையில் குறித்து பேசும் விஜய் எந்த ஒரு போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை. திமுக அரசை குறை கூற வேண்டும். அதே நேரம் திமுகவை மட்டும் குறை கூறினால் சரியாக இருக்காது என தெரிந்து சிலர் அவ்வப்பொழுது பாஜகவையும் தொட்டு காட்டுகிறார்கள்"என்று கூறினார்.