அரசியல்

மோடி அமித்ஷா கூட்டம் இன்னும் திமுகவைப் பற்றி முழுவதுமாக அறியவில்லை.. தென்றல் அல்ல நாங்கள் - சிலந்தி!

‘தென்றல் அல்ல நாங்கள்; புயல் என அறிவீர்!’ என்ற தலைப்பில் இன்னைறய முரசொலியில் சிலந்தி கட்டுரை வெளிவந்துள்ளது.

மோடி அமித்ஷா கூட்டம் இன்னும்  திமுகவைப் பற்றி முழுவதுமாக அறியவில்லை.. தென்றல் அல்ல நாங்கள் - சிலந்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பது என்பது ஒரு ரகம், குட்டையை குழப்பி மீன் பிடிப்பது மற்றொரு ரகம்! இதிலே பா.ஜ.க. இரண்டாவது ரகம்! ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுபவன், துரும்பைப் பிடித்து மீண்டுவிட மாட்டோமா என எண்ணி எது சிக்குதோ, அது பாம்பா? பழுதா? என்று கூட புரியாத நிலையில் தன்னைக் காத்துக் கொள்ள பாம்பை பிடித்துவிட்டு அது படம் எடுப்பதைக் கண்டு பயந்து நடுங்குவதுபோல இன்றைய பா.ஜ.க. நிலை உள்ளது!

தமிழ்நாட்டு எல்லைக்குள், தமிழ் மக்களின் எதிர்கால நம்பிக்கையாக உருவாகி வந்த உதயநிதி ஸ்டாலின் இன்று அகில இந்திய அளவில் வியந்து நோக்கும் ஒரு இளந்தலைவனாக உருவெடுத்துள்ளார். அகில இந்திய ஏடுகள் அனைத்திலும் முதல் பக்க, முக்கிய செய்தியாக வந்துள்ள பெயர் உதயநிதி ஸ்டாலினுடையது! தமிழ்நாடு ஊடகங்கள் மட்டுமின்றி அகில இந்திய ஊடகங்களிலும் இன்று உதயநிதியே முக்கியத்துவம் பெற்று நிற்கிறார். காவி உடையில் உள்ள ஒரு கபட வேடதாரி காட்டுமிராண்டி போல ஒரு கையிலே உதயநிதி படத்தையும் மற்றொரு கையில் வாள் ஒன்றையும் சுமந்து வந்து நடுத்தெருவில் நான்கு பேர் முன்னிலையில் உதயநிதி ஸ்டாலின் படத்தை வாளால் குத்தி கிழித்தெறிகிறார்!

இன்னொரு பக்கம் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு 10 கோடி ரூபாய் தருவதாக காவி உடை கயவன் ஒருவன் விலை நிர்ணயிக்கிறான்!

இந்த காவி உடை கபட வேடதாரிகளுக்கு இந்த அளவு தைரியம் வரக் காரணம் இந்த நாட்டின் உள்துறை அமைச்சர் ‘‘தங்களது பின்னால் இருக்கிறார்’’ என்ற எண்ணமே! ஏறத்தாழ கடந்த 100 ஆண்டு காலமாக திராவிட இயக்கம் தொடர்ந்து சனாதன தர்மத்தையும் அதன் அடிப்படைக் கொள்கையான வர்ணாசிரமத்தையும் எதிர்த்துத்தான் போர்க்குரல் கொடுத்து வந்துள்ளது. ஒரு கால கட்டத்தில் ‘‘சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு செருப்பால் அடி’’ – என்பது தமிழ்நாட்டின் சுவர்கள் எல்லாம் கொட்டை எழுத்துக்களில் மிளிர்ந்ததை இன்று 70 வயதைக் கடந்து வாழ்பவர்கள் கண்டிருக்க முடியும்! பார்ப்பனரல்லாத அனைத்து இந்து மத மக்களும் சனாதன தர்மத்தின் கோரப்பிடியில் சிக்கி, தங்களது சுயமரியாதையை இழந்து சீரழிந்த காலத்தில், திராவிட இயக்கம் உருவாக்கி உலாவந்த இந்தச் சொற்கோவை; தமிழ் மக்களின் இனமான உணர்வை தட்டி எழுப்பத் துவங்கியது! சிங்க இளைஞர்கள் பலர் சிலிர்த்தெழுந்தனர்.

‘‘பரணி பல பாடிப்பாங்குடன் – வாழ்ந்த பைந்தமிழ் நாட்டில் சொரணை சிறிது மிலாச் சுயநலத்துச் சோதாக்கள் சில கூடி வருணத்தை நிலைநாட்ட வகையின்றிக் கரணங்கள் போட்டாலும் மரணத்தின் உச்சியிலே மானங்காக்க மறத்தமிழா போராடு! – ஏறத்தாழ இன்றைக்கு 80 ஆண்டுகளுக்கு முன் தமிழினத் தலைவர் கலைஞர் 20 வயது இளைஞனாக தமிழனின் தன்மானத்தை தட்டி எழுப்பிட எழுதியது இது!

இந்த சனாதன தர்மமும், வர்ணாசிரமமும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைத் தவிர, ஏனைய அனைத்து இந்து சமுதாய மக்களையும் சாதியால் பிரித்து முன்னேறிட விடாது தடுத்திட அமைக்கப்பட்ட இரும்புத்திரை! சனாதனமும், வர்ணாசிரமமும் வேறுவேறல்ல; ‘சனாதன தர்மத்தின் முக்கிய அம்சமே, வர்ணாசிரமம்தான்’­என காஞ்சி சங்கராச்சாரியாரே அவர் எழுதியுள்ள ‘‘தெய்வத்தின் குரலில்’’ தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். சனாதன தர்மத்திற்கு வெவ்வேறு விளக்கங்கள் தரப் புறப்பட்டுள்ளோர்; காஞ்சி சங்கராச்சாரியாருக்கு எதிராக எந்த வாலையும் ஆட்ட மாட்டார்கள் என்பது நாமறிந்ததே!

மோடி அமித்ஷா கூட்டம் இன்னும்  திமுகவைப் பற்றி முழுவதுமாக அறியவில்லை.. தென்றல் அல்ல நாங்கள் - சிலந்தி!

இந்த நிலையில், தமிழ்நாட்டில் தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று என்று பேசியதில் என்ன தவறு? இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர் ஓர் இடத்தில் இது குறித்து விமர்சிக்கிறார்; பி.ஜே.பி.யின், தலைவர் நட்டா வேறு ஒரு மாநிலத்தில் இந்தப் பேச்சுக்குத் தனது எதிர்ப்பை தெரிவிக்கிறார்; இந்தியா முழுதும் ஒரே நேரத்தில் பல மாநிலங்களில்; உதயநிதி ஸ்டாலின் பேச்சுப் பொருளாகிறார்!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய அரங்கம் தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் உள்ள சிறிய அரங்கம்! அங்கு சனாதன தர்மத்திற்கு எதிராக பலர் பேசினர்; பத்து வயது பாலகனாக மேடையிலே தோன்றி திராவிட இயக்கத்தின் கொள்கைகளை பிரச்சாரம் செய்து வந்து கொண்டிருப்பவரும், திராவிட இயக்கக் கொள்கைகளை நடமாடும் பல்கலைக்கழகமாக இருந்து விரித்துரைத்திடும் ஆசிரியராக விளங்கிடும் பெருமதிப்பிற்குரிய வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் போன்றோர் பங்கேற்ற அந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில், உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரையை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு, நாட்டின் உள்துறை அமைச்சர் தொடங்கி உதவாக்கரை பி.ஜே.பி. தலைவர்கள் வரை விமர்சிக்கிறார்கள் என்றால் என்ன காரணம்?

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சை திரித்து, சனாதனதர் மத்தை ஒழிப்போம் என்பதை – ஏதோ சனாதனவாதிகளை ஒழிப்போம் என்று கூறியதுபோல திரித்து ‘இனப்படுகொலை’ (GENOCIDE) என்றெல்லாம் துரும்பைத் தூணாக்கி, குதிக்கத் தொடங்கியுள்ளனர். உச்சநீதிமன்றம், உடனடியாக ‘சுயமோட்டோ’ வழக்காக விசாரிக்க வேண்டும் என்று டெல்லியிலிருந்து பி.ஜே.பி. குரல் கொடுக்கிறது. 2021–ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17–ந் தேதியிலிருந்து 19–ந் தேதி வரை ஹரித்வாரில் நடந்த தர்ம சன்சாட் (Dharma Sansad) எனும் இந்து அமைப்பின் கூட்டத்தில்,‘‘இந்துக்களை பாதுகாக்க முஸ்லீம்களை இனப்படு கொலை செய்ய வேண்டும்’’என வெளிப்படையாக பேசப்பட்டது! இதுபோன்ற மிருக வெறிப்பேச்சுக்களை இந்து சாமியார்கள் என்ற போர்வையில் இருந்த கொலை வெறிக்கூட்டம் பேசியது மட்டுமின்றி அதற்கான உறுதிமொழியும் எடுத்துக்கொண்டது. அந்த வெறித்தன கூட்டமும் சனாதன தர்மத்தை நிலைநாட்ட நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

மோடி அமித்ஷா கூட்டம் இன்னும்  திமுகவைப் பற்றி முழுவதுமாக அறியவில்லை.. தென்றல் அல்ல நாங்கள் - சிலந்தி!

அந்தக் கூட்டத்தில் காவி, கமண்டலம் அணிந்து ஆண்கள் தங்களை சாதுக்களாகவும், பெண்கள் சாதுவிக்களாகவும் கூறிக்கொண்டனர்! ஒரு இனப்படுகொலை செய்ய பகிரங்க அழைப்பு விடப்பட்ட அந்தக் கூட்டத்தினர் மீது கண்துடைப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு பல நேரங்களில் உச்சநீதி மன்றத்தின் கோபத்துக்கு ஆளாகியது பி.ஜே.பி. அரசு என்பது பழைய வரலாறு அல்ல; சமீபத்தில் நடந்த நடவடிக்கைகள்! அந்த நேரத்தில் இன்று கொதிக்கின்ற அமித்ஷா, நட்டா கூட்டங்கள் ஒரு சிறியகண்டனக் குரல் கூட எழுப்பவில்லை.

அரசியல் ஆதாயம் தேட, மக்களின் மனதில் மதத்துவேஷங்களை உருவாக்கி அதன் மூலம் வெற்றி பெறலாம் என்று எண்ணி செயல்படும். இந்தக் கூட்டத்துக்கு பல நேரங்களில் மரண அடி தந்துள்ளனர் மக்கள்!

சமீபத்தில் கருநாடகாவில் நடந்த தேர்தலின் போது ‘பஜ்ரங்தள்’ போன்ற மதவெறி இயக்கங்களைத் தடை செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை திரித்து, பஜ்ரங்கி என்றால் ஆஞ்சநேயர்; அந்த ஆஞ்சநேயர் உதித்த ஸ்தலம் கர்நாடகம்; அந்த ஆஞ்சநேயரைத் தடை செய்யப் போகிறார்களாம்; ராம, ஆஞ்சநேய பக்தர்களே இந்த இந்துமத விரோதிகளுக்கு ஓட்டளிக்கலாமா? – என்று மோடி தெருத்தெருவாக சென்று, ஒரு இட்டு கட்டிய கதையைக் கூறி பிரச்சாரம் செய்தார்! ‘‘ஜெய் பஜ்ரங்கபலி’’ என்ற கோஷமே மோடிக் கூட்டத்தின் பிரச்சார யுக்தியாக பயன்படுத்தப்பட்டது! முடிவு என்ன ஆயிற்று? கற்ற பாடங்களில் இருந்து புத்தி பெறாத கூட்டம், புதிய திரிபுகளைத் தொடங்கியுள்ளன! பாவம்; மோடி, அமித்ஷா கூட்டம் தி.மு.க.வைப் பற்றி முழுவதுமாக அறியவில்லை! தி.மு.க.விடம் பூச்சாண்டி காட்டி பார்க்கின்றனர்! நெடிய விளக்கம் தரவில்லை! எங்களை வார்த்தெடுத்த தலைவர் கலைஞர் வடித் தெடுத்த வரிகளைக் கூறுகிறோம்.

தலைக்கனம் பிடித்துப் பிதற்றுகின்ற மெய்யன்பீர்

வலைக்குள் மாட்டிட

வளர்த்து வந்த புராணத்தைச்

சாக்காட்டால் மோதிச் சடுதியில் சாய்த்திடுவோம்.

பூக்காட்டில் புகுந்துவரும் தென்றலல்ல நாங்கள்!

புயல் என அறிவீர்!

Related Stories

Related Stories